பாட்னா: பீகார் மாநிலத்தில் கள்ளச் சாராயம் குடித்த 3 பேர் பலியாக, 2 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

அம்மாநிலத்தின் கைமுர் என்ற மாவட்டத்தில் இந்த சோக சம்பவம் அரங்கேறி உள்ளது.  இங்கு கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவது குறித்து ஏற்கனவே புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், மாவட்ட நீதிபதி, துணை கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தில் இருந்து ஒருவரது உடல் கைப்பற்றப்பட்டு இருப்பதாகவும், மற்ற 2 பேரின் உடல்களை அவர்களது உறவினர்கள் எடுத்துச் சென்றுவிட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

கள்ளச்சாராயம் குடித்து உடல்நிலை பாதிக்கப்பட்ட மற்றவர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலியானவர்களின் பிரேத பரிசோதனைக்கு பிறகே மரணத்துக்கான காரணம் குறித்து தெரிவிக்க முடியும் என்று காவல்துறை கூறி உள்ளது.