தூத்துக்குடி:

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பிரேமலதா, பத்திரிகையாளர்களுக்கு எதிராக பேசியதால் ஏற்பட்ட பிரச்சினையை தொடர்ந்து தேமுதிக தொண்டர்கள் பத்திரிகையாளர்களை தாக்கினர்.

இது தொடர்பாக பத்திரிகையாளர் சார்பாக கொடுக்கப்பட்ட புகாரையடுத்து, பிரமேலதா, சுதீஷ் உள்பட கட்சி நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நேற்று தூத்துக்குடி வந்த தேமுதிக மகளிர் அணி தலைவர் பிரேமலதா விஜயகாந்த், அங்கு 56-வது நாளாகத் தொடர் போராட்டம் நடத்தி வரும் அ.குமரெட்டியாபுரம் மக்களைச் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அப்போது போராட்டக்குழுவினருடன் அமர்ந்து, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கோஷம் எழுப்பிய பிரேமலதா, ஆலையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களைப் பேசச் சொன்னார்.

அதைத்தொடர்ந்து பேசிய பிரேமலதா, ;உங்களது குறை களை மத்திய மாநில அரசுகளிடம் விஜயகாந்த் கொண்டு செல்வார். திமுக, அதிமுக தவிர்த்து ஒருமுறை தேமுதிக விற்கு வாய்ப்பளித்துப் பாருங்கள். விவசாயிகளின் நன்மைக்காக இதைச் செய்யுங்கள் என்று பேசினார்.

மேலும், ஸ்டெர்லைட் போராட்டத்தை  எந்த மீடியாவும் காட்டவில்லை என்று குற்றம் சாட்டியவர்,  இந்தப் போராட்டத்தை தொடக்கத்தில் இருந்து ஒளிபரப்பி வருவது எங்களது எங்கள் டி.வி.மட்டுமே என திரும்ப திரும்ப கூறினார்.

நான் இங்கு வந்ததால்தான் மீடியாக்கள் இங்கு வந்திருக்கி றார்கள் என்றும் பேசினார். இதற்கு மற்ற ஊடகத்தை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து, கூட்டத்தை புறக்கணித்து அங்கிருந்து கிளம்பினர்.

இதையடுத்து கட்சியின் பெண் நிர்வாகிகள் உள்பட பலர் செய்தியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது மோதலாக மாறியது. இந்த தாக்குதலில் தொலைக்காட்சி ஊடகத்தை சேர்ந்த 3 பேருக்கு காயம் ஏற்பட்டது.

இதையடுத்து, தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றம் சார்பில் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்திய புகாரின் பேரில் பிரேமலதா விஜயகாந்த், சுதீஷ், ஆறுமுகநயினார், ஜெயராமன், மாவட்ட மகளிரணி பொருளாளர் அங்கயற்கண்ணி, ஜெயராமன் உள்ளிட்ட மேலும் பத்து பேர் மீது 147,148 ,294B, 323 மற்றும் 506(2) ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.