பொன்னேரியில் ரியல் எஸ்டேட் உரிமையாளர் வீட்டில் ரூ.3 லட்சம் மற்றும் 25 பவுன் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொன்னேரி அருகே சக்தி நகரை சேர்ந்தவர் சந்துரு குமார். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் குடும்பத்துடன் சென்னையில் உள்ள மாமியார் வீட்டிற்க்கு சென்றிருந்தார். இந்த நிலையில் சந்துரு குமாரின் வீட்டு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பக்கத்து வீட்டுக்காரர் பார்த்து, அவருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார். அதை கேட்டு பதறியடித்து வந்த சந்துரு குமார், மர்ம கும்பல் ஒன்று நகை மற்றும் பணத்தை சுருட்டி சென்றிருப்பதை உறுதி செய்து, இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

சந்துரு குமாரின் புகாரை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பொன்னேரி காவல்நிலைய காவலர்கள், வழக்கு பதிந்துள்ளதோடு, கொள்ளையர்களையும் தேடி வருகின்றனர். 25 பவுன் நகை, ரூ.3 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த கொள்ளையில் ஈடுபட்டது அதே பகுதியை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.