சென்னை:
மிழ்நாட்டில் 100 நாள் வேலைத்திட்டத்தில் 3 மாதங்கள் ஊதியம் வழங்கப்படவில்லை என மத்திய அமைச்சரிடம்  டி.ஆர்.பாலு எம்.பி. புகார் அளித்துள்ளார்.

மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் வேளாண்மை துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

தி.மு.க. கடந்த சில நாட்களாக தமிழ்நாடு முழுவதும் கிராம மக்கள் சபை கூட்டங்கள் நடத்தி, கிராம பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்து வருகிறது. கிராமப்பகுதி மக்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டப் பணியாளர்கள், அக்டோபர் மாதம் முதல் சென்ற 3 மாதங்களாக ஊதியம் அளிக்கப்படவில்லை என்று மிகுந்த வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

இதில் பணியாற்றிடும் மக்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்காமல், அதுவும் 3 மாதங்களாக வழங்காமல் தாமதம் செய்வது, அந்த ஏழைத்தொழிலாளர்களின் அன்றாட வாழ்வையும், வாழ்வாதாரத்தையும் மறுத்து சிதைப்பதுடன் அவர்களை காரிருளில் தள்ளிவிடும் கொடுமை ஆகும்.

எனவே, இந்த பிரச்சினையை மத்திய அரசு உடனடியாக கவனத்தில் கொண்டு தேவையான நிதியை வழங்கி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 100 நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றி வரும் அனைவருக்கும் 3 மாதங்களாக தராமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஊதியம் அனைத்தையும் வழங்கிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.