சென்னை: திருப்போரூர் செங்காடு துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக மேலும் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் இமயம்குமார் என்பவருக்கும், திருப்போரூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. செந்தில் என்ற இதயவர்மன் தரப்பினருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. செங்காடு கிராமத்தில் நிலத்துக்கு பாதை அமைப்பது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
அப்போது எம்.எல்.ஏ. தந்தை லட்சுமிபதி துப்பாக்கியால் சுட்டதில் சீனிவாசன் படுகாயம் அடைந்தார். இமயம் குமாருக்கும் காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்துக்கு பிறகு தலைமறைவான  எம்எல்ஏ இதயவர்மன் மேடவாக்கம் அருகே பதுங்கி இருந்த போது தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் இந்த வழக்கில் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் குமார் உட்பட மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக இதயவர்மன் உட்பட 12 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.