கரட்டுமேடு அருகே 3 வயது பெண் குழந்தை ஒன்று காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டதால், அப்பகுதியில் பெரும் சோகம் நிலவி வருகிறது.

கோவை மாவட்டம் கரட்டுமேடு பகுதியில் உள்ள முருகன் கோவில் அருகே, 3 வயது பெண் குழந்தை ஒன்று இறந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் கொடுக்கப்பட்டதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உடலில் காயங்களுடன் சடலமாக கிடந்த குழந்தையை மீட்டெடுத்து, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவ்விவகாரம் தொடர்பாக வழக்கு பதிந்துள்ள காவலர்கள், காரமடையை சேர்ந்த தமிழ் என்பவரின் குழந்தையே மீட்கப்பட்ட குழந்தை என்பதை உறுதி செய்துள்ளனர்.

சில நாட்களுக்கு முன்னர் குழந்தை கடத்தப்பட்டதாக தமிழ் காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருந்த நிலையில், தற்போது குழந்தை சடலமாக மீட்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.