டெல்லி: பிரதமர் உட்பட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓராண்டுக்கான ஊதியத்தில் 30%  தொகை பிடித்தம் செய்ய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கூறியிருப்பதாவது: கொரோனா தொற்று காரணமாக தமிழகம், மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களில் அதிக பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

மேலும், பிரதமர் உட்பட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓராண்டுக்கான ஊதியத்தில் 30%  தொகை பிடித்தம் செய்யப்படும்.

நிதி சிக்கன நடவடிக்கையாக பிரதமர் மோடி தலைமையில் நடபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர், துணைத் தலைவர், ஆளுநர்களும் தாமாக முன்வந்து ஊதிய பிடித்தத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளனர்.

அவ்வாறு பிடித்தம் செய்யப்படும் ஊதியம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும்.  ஏப்ரல் 1ம்  தேதி 2020ல் இருந்து இந்த ஊதியம் பிடித்தம் நடைமுறைக்கு வருகிறது.

மேலும், அடுத்த 2 ஆண்டுகளுக்கு  அதாவது 2020 – 21 மற்றும் 2021 – 22ம் ஆண்டுகளுக்கு எம்பிகளுக்கான தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கப்படாது. இந்த வகையில் மிச்சமாகும் ரூ.7,900 கோடி பணம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் என்றார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பல்வேறு படிகள் உட்பட மாதந்தோறும் 2 லட்சம் ரூபாய் ஊதியமாக வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.