சென்னை:
புழல் சிறை வளாகத்தில் சில கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில், சிறை வளாகத்திற்குள்ளேயே கைதிகளுக்கு  சிகிச்சை அளிக்க தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து வருகிறது. சென்னை உள்பட பல மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  சென்னையில் இதுவரை 13,362 பேர் கொரேனாவல் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில்,  சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சில கைதிகள் தொண்டைவலி, காய்ச்சல் போன்ற நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை நடத்தப்பட்டது.
இதில் சுமார் 30 கைதிகள் உள்பட தூய்மை பணியாளர் ஒருவருக்கு தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து,   புழல் சிறை வளாகத்திலேயே நோயாளிகளை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்கான சிறப்பு வார்டும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து சிறைகளிலும் இதுவரை  40 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.