சென்னை,

ஜெயலலிதா மறைந்து இன்றோடு 30வது நாளாகிறது. அதையொட்டி அவரது 30வது துக்கநாள் இன்று அதிமுகவினரால் அணுசரிக்கப்பட்டது.

இதையொட்டி தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் அ.தி.மு.க.வினர் மவுன ஊர்வலம் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

ஜெயலலிதா நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள எம்ஜிஆர் சமாதி வளாகத்தில் உள்ள அவரது கல்லறை யில் அவரது உருவப்படம் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. ஏராளமான வெளியூர் மற்றும் உள்ளுர் அதிமுக தொண்டர்களும் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் வி.பி.கலை ராஜன் தலைமையில் அ.தி.மு.க.வினர் மெரினா கடற்கரை காந்தி சிலையில் இருந்து ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு அமைதி ஊர்வலமாக சென்றனர்.

இதில் பொன்னையன், தமிழ்மகன் உசேன், கோகுல இந்திரா, எஸ்.ஆர்.விஜய குமார் எம்.பி., முருகன், சின்னையன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்கள் ஜெயலலிதா சமாதியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

 

தென்சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் வி.என்.ரவி தலைமையில் சாலிகிராமத்தில்இருந்து கே.கே.நகர் சிவன்பார்க்கிற்கு ஊர்வலமாக வந்து அங்கு வைக்கப்பட்டு இருந்த ஜெயலலிதா உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

வடசென்னை தெற்கு மாவட்ட செயலாளர் பால கங்கா தலைமையில் மண்ணடியில்இருந்து ராயபுரம் வரை அமைதிப் பேரணி நடைபெற்றது. இதில் அமைச்சர் ஜெயக்குமார், பகுதி செயலாளர்கள் மகிழ்அன்பன், ராமஜெயம், சுகுமார், தளவாய் சுந்தரம், பா.வளர்மதி, டாக்டர் மைத்ரேயன், நவநீதகிருஷ்ணன் எம்.பி., நடராஜன் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளர் வெற்றிவேல் தலைமையில் தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலத்தில் இருந்து அமைதிப் பேரணி தொடங்கியது. ஊர்வலமாக வந்த அவர்கள் புதுவண்ணாரப்பேட்டை ஏ.இ. கோவில் தெருவில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இதில் கலந்துகொண்ட லட்சக்கணக்கான நிர்வாகிகளும், தொண்டர்களும், மறைந்த ஜெயலலிதா வின் திருவுருவப் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி உறுதிமொழி ஏற்றனர்.

ஜெயலலிதா நினைவிடத்தில் இன்று வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஏராளமான அ.தி.மு.க. தொண்டர்கள் மொட்டையடித்து அஞ்சலி செலுத்தினார்கள். இதையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருந்தது.