indira-gandhi
முன்னாள் பாரத பிரதமரும், இந்தியாவின்  இரும்பு பெண்மணி என்று போற்றப்பட்டவருமான  திருமதி. இந்திரா காந்தியின் 32வது நினைவு தினம் இன்று.
இந்தியாவின் மூன்றாவது பிரதம மந்திரியான  இந்திரா காந்தி 1984ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31 ஆம் நாள் காலை 09:20 மணியளவில், புது தில்லி, சப்தர்ஜங் தெருவிலுள்ள அவரது இல்லத்தில் சத்வந்த் சிங், பீண்ட் சிங் என்ற அவரது இரு பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1984 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அமிருதசரசு நகரிலுள்ள சீக்கியர்களின் முக்கிய கோயிலான  பொற்கோயிலை  இந்திய  ராணுவத்தினர் தாக்கிய புளூஸ்டார் நடவடிக்கையால்பொற்கோயில் பெரிதும் சேதமடைந்தது. இந்நடவடிக்கையின் எதிர்விளைவே இவரது படுகொலையாகும்.
இந்திராகாந்தி சுடப்பட்டு வீழ்ந்த இடத்தில் கண்ணாடி நுழைவாயில்கொண்ட பளிங்குப் பாதையொன்று அவரது நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ளது
அயர்லாந்து நாட்டுத் தொலைக்காட்சிக்காக ஆவணப்படம் எடுத்துக்கொண்டிருந்த பிரித்தானிய நடிகர் பீட்டர் உஸ்தொனோவிற்குப் பேட்டியளிப்பதற்காக,
1984ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 31 ஆம் நாள் காலை 09:20 மணிக்கு இந்திராகாந்தி புதுதில்லி, சப்தர்ஜங் தெருவில் அமைந்துள்ள அவரது வீட்டுத் தோட்டத்திலிருந்து அடுத்தமைந்துள்ள அக்பர் வீதியிலுள்ள அலுவலகத்திற்குச் சென்று கொண்டிருந்தார்.
அங்கிருந்த சிறுவாயிலை அவர் கடக்கும்போது அவ்வாயிலைக் காத்துநின்ற அவரது பாதுகாவலர்கள் சத்வந்த் சிங், பீண்ட் சிங் இருவரும் அவரைச் சுடத் தொடங்கினர்.
பீண்ட்சிங் இந்திராகாந்தியின் அடிவயிற்றில் மூன்றுமுறையும், கீழே விழுந்துவிட்ட இந்திராகாந்தியை சத்வந்த் சிங் இயந்திரத் துப்பாக்கியால் 30 முறையும் சுட்டனர்.
சுட்டபின்பு இருவரும் தமது ஆயுதங்களைக் கீழெறிந்து விட்டனர். பீண்ட் சிங் “நான் செய்யவேண்டியதை செய்து விட்டேன்.
நீங்கள் செய்ய விரும்புவதைச் செய்து கொள்ளலாம்.” எனக் கூறினார்.

இந்திராகாந்தி சுடப்பட்டு வீழ்ந்த பாதை
இந்திராகாந்தி சுடப்பட்டு வீழ்ந்த பாதை

அடுத்த ஆறு நிமிடங்களில் இந்திய – திபெத் எல்லைக் காவல்படையைச் சேர்ந்த தார்செம் சிங் ஜாம்வால், ராம் சரண் என்ற வீரர்கள் பீண்ட் சிங்கை சுட்டுக் கொன்றனர்.
சத்வந்த் சிங், இந்திராகாந்தியின் மற்ற பாதுகாவலர்களால் பலத்த காயங்களுடன் சிறைபிடிக்கப்பட்டார்.
1989ல் சத்வந்த் சிங்கும் உடன் குற்றவாளியான கெகர் சிங்கும் தூக்கிலிடப்பட்டனர்.
இந்திராகாந்தி சுடப்பட்டு 10 மணி நேரங்கழித்துதான் தூர்தர்ஷன் மாலைச் செய்தியில் அவர் இறந்த செய்தி அறிவிக்கப்பட்டது.
 
அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துமனைக்கு 09:30 மணிக்குக் கொண்டு செல்லப்பட்டார். 14:20 மணிக்கு அவரின் இறப்புச் செய்தி அறிவிக்கப்பட்டது.
டி. டி. தோக்ரா தலைமையிலான மருத்துவர் குழு இந்திரா காந்தியின் உடலைக் கூறாய்வு செய்தது. இயந்திரத் துப்பாக்கி, சுழல் கைத்துப்பாக்கியென இருவிதமான ஆயுதங்களிலிருந்து அவரது உடலில் கிட்டத்தட்ட 30 குண்டுகள் தாக்கியுள்ளதாக கூறாய்வு முடிவில் கூறப்பட்டது.
கொலையாளிகள் அவரை நோக்கிச் சுட்ட 33 குண்டுகளில் 30 குண்டுகள் அவரைத் தாக்கியிருந்தன. 23 குண்டுகள் அவர் உடலைத் துளைத்து வெளியேறியிருந்தன; 7 குண்டுகள் அவர் உடலில் தங்கியிருந்தன.
கொலைசெய்ய பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகளை அடையாளம் காண்பதற்காக தோக்ரா இந்திரா காந்தியின் உடலிலிருந்த குண்டுகளை வெளியே எடுத்தார்.
குண்டுகள் கொலையாளிகள் பயன்படுத்தியிருந்த ஆயுதங்களோடு ஒத்துப் போயின. இந்திரா காந்தி கொலை வழக்கில் ஒரு முக்கிய சாட்சியமாக தோக்ரா சேர்க்கப்பட்டு விசாரிக்கப்பட்டார்.
நவம்பர் ஒன்றாம் நாளன்று அவரது உடல் ஒரு பீரங்கி வண்டியில் தில்லி தெருக்களின் வழியே தீன் மூர்த்தி பவனுக்கு கொண்டு செல்லப்பட்டது.
நவம்பர் 3ம் நாளன்று அவரது உடல் ராஜ்காட்டுக்கு அருகே தகனம் செய்யப்பட்டது. அவரது மூத்த மகனான ராஜீவ் காந்தி அவருக்கு இறுதிக்கடன்களைச் செய்தார்.
இந்திராகாந்தி நினைவிடம்
இந்திராகாந்தி நினைவிடம்

முனனாள் பிரதமர் இந்திராகாந்தியின் வாழ்க்கை  குறிப்பு
1917 ம் ஆண்டு நவம்பர் 19-ம் தேதி பண்டிட் ஜவஹர்லால் நேருவின் மகளாகப் பிறந்தார். சுவிட்ஸ்ர்லாந்தின் பெக்ஸ் பகுதியிலுள்ள எக்கோல் நோவல், ஜெனிவாவிலுள்ள எக்கோல் இண்டர் நேஷனல், பம்பாய் மற்றும் பூனாவில் உள்ள பீப்பிள்ஸ் ஒன் ஸ்கூல், பிரிஸ்டாலிலுள்ள பேட்மிட்டன் ஸ்கூல், விஷ்வபாரதி, சாந்தி நிகேதன், ஆக்ஸ்போர்ட் சோமார்வில் கல்லூரி போன்ற சிறந்த கல்வி நிறுவனங்களில் அவர் கல்வி பயின்றார்.
பல்வேறு சர்வதேச பல்கலைகழகங்கள் அவருக்கு கௌரவ டாக்டர் பட்டத்தை அளித்துள்ளன. சிறந்த கல்வி பெற்ற குடும்பப் பின்னனியிலிருந்து வந்த அவருக்கு கொலம்பியா பல்கலைகழகம் உயர் நிலை பட்டம் (சைடேஷன் ஆப் டிஸ்டிங்கஷன்) அளித்துள்ளது.
திருமதி இந்திரா காந்தி சுதந்திர போராட்டத்தில் தன்னை தீவிரமாக ஈடுபத்திக் கொண்டார். ஒத்துழையாமை இயக்கத்தின் போது காங்கிரஸ் கட்சிக்கு உதவும் வகையில், தனது சிறு வயதிலேயே சர்க்கா சங்கத்தையும் 1930ல் வானர் சேனாவையும் நிறுவினார்.
1942 செப்டம்பர் மாதம் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். காந்தியின் வழிகாட்டுதலில் தில்லியில் 1947ல் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அவர் பணியாற்றினார்.
1942 ஆம் ஆண்டு மார்ச் 26 ஆம் தேதி பெரோஸ் காந்தியை மணந்தார். அவர்களுக்கு இரண்டு மகன்கள். திருமதி. காந்தி 1955 ஆம் ஆண்டு காங்கிரஸ் செயற்குழு கமிட்டியில் உறுப்பினரானார். அதே ஆண்டில் கட்சியின் பொதுத் தேர்தல் நடைபெற்றது.
1958 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் மத்திய நாடாளுமன்றக் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அனைத்திந்திய காங்கிரஸ் குழு தேசிய ஒருங்கிணைப்பு குழுவின் தலைவராகவும் இருந்தார்.
1956-ல் அனைத்திந்திய இளைஞர் காங்கிரஸ் மற்றும் பெண்கள் துறையின் தலைவராக இருந்தார்.
1959 முதல் 1960 வரை இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராக அவர் பணியாற்றினார்.
மீண்டும் 1978 ஜனவரி மாதம் அவர் இப்பதவியை ஏற்றார்.
1964 முதல் 1966 வரை மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சராகப் பணியாற்றினார்.
1966 ஜனவரி முதல் 1977 மார்ச் வரை இந்தியாவின் மிகஉயரிய பதவியான பிரதமர் பொறுப்பை எற்றார்.
1967-ல் செப்டம்பர் முதல் 1977 மார்ச் வரை மத்திய அணுசக்தி துறையின் அமைச்சராகவும் இருந்தார்.
கூடுதலாக 1967, செப்டம்பர் 5 முதல் 1969 பிப்ரவரி 14 வரை மத்திய வெளியுறவுத்துறை  அமைச்சராகவும் பணியாற்றினார்.
1970 ஜூன் முதல் 1973 நவம்பர் வரை மத்திய உள்துறை அமைச்சராகப் பணி புரிந்தார்.
1972 ஜூன் முதல் 1977 மார்ச் வரை மத்திய விண்வெளித்துறை அமைச்சராக இருந்தார்.
1980 ஜனவரி 14 முதல் மீண்டும் பிரதமராகப் பதவி ஏற்றுக்கொண்டார். மத்திய திட்டக் குழுவின் தலைவராகவும் பதவி வகித்தார்.
கமலா நேரு நினைவு மருத்துவமனை, காந்தி ஸ்மாரக் நிதி, கஸ்தூரிபாய் காந்தி நினைவு அறக்கட்டளை போன்ற பல்வேறு அமைப்புகளிலும் நிறுவனங்களிலும் திருமதி. காந்தி முக்கிய பொறுப்பு வகித்தார்.  ஸ்வராஜ் பவன் அறக்கட்டளையின் தலைவராகவும் செயல்பட்டார்.
1955 பால் சகயோக், பால பவன் வாரியம் மற்றும் குழந்தைகளுக்கான தேசிய அருங்காட்சியகம் ஆகிய நிறுவனங்களிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.
திருமதி. இந்திரா காந்தி, அலகாபாத்தில் கமலா நேரு வித்யாலாவை நிறுவினார். 1967 முதல் 1977 வரை ஜவஹர்லால் நேரு பல்கலைகழகம், வடகிழக்கு பல்கலைகழகம் போன்ற பெரிய நிறுவனங்களுடன் அவர் இணைந்து செயல்பட்டார்.
டில்லி பல்கலைகழக நீதிமன்றத்தின் உறுப்பினராகவும், ஐ.நாவின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சாரா அமைப்பின் இந்திய பிரதிநிதியாகவும் (1960 – 1964) ஐ.நா. கல்வி அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் செயற்குழு உறுப்பினராகவும், (1960 -1964) 1962-ல் தேசிய பாதுகாப்பு குழுவின் உறுப்பினராகவும் அவர் பணியாற்றினார்.
சங்கீத நாடகக் கழகம், தேசிய ஒருங்கிணைப்புக்குழு, இமய மலைஏறும் கலைக்கான நிறுவனம், தட்சிண பாரத், ஹிந்தி பிரச்சார சபை, நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலக சமூகம், ஜவஹர்லால் நேரு நினைவு நிதி ஆகிய நிறுவனங்களுடன் அவர் இணைந்து செயலாற்றினார்.
திருமதி. இந்திரா காந்தி 1964 ஆகஸ்ட் முதல் 1967 பிப்ரவரி வரை மாநிலங்களவை உறப்பினரானார்.
நான்காவது, ஐந்தாவது, ஆறாவது  பாராளுமன்றத் தேர்தல்களில் வெற்றிபெற்று மக்களவை உறுப்பினராப் பணியாற்றினார்.
மீண்டும் ஏழாவது முறையாக நாடாளுமன்றத் தேர்தலில் உத்திரப்பிரதேசத்தின் ரேபரலி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பிறகு 1980 ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஆந்திர பிரதேசத்தின் மேடக் தொகுதியிலிருந்து தேர்வு செய்யப்பட்டார். மேடக் தொகுதியை தக்க வைத்துக் கொண்டு, ரேபரலி தொகுதியை ராஜினாமா செய்தார்.
1967 முதல் 1977 வரை காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். பின்னார் 1980 ஜனவரி மாதம் மீண்டும் இப்பொறுப்பை ஏற்றார்.
பல்வேறு துறைகளில் ஆர்வம் கொண்டிருந்த அவர் வாழ்க்கையை ஒரு ஒருங்கிணைந்த செயல்பாடாகவே கருதினார். ஆர்வமும் செயல்பாடுகளும் வெவ்வேறு தன்மையை கொண்டிருந்தாலும் இரண்டையும் தனித்தனியாக அவர் பிரித்துப்பார்க்கவில்லை. அவர் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார்.
1972ல் பாரத் ரத்னா, 1972ல் வங்காள தேசத்தின் விடுதலைக்காக மெக்ஸிகன் கழகத்தின் விடுதலைக்கான விருது, ஜ.நாவின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் 2-வது ஆண்டு விருது, 1976ல் நகரி பிரச்சாரினி சபையின் சாகித்தய வச்சாஸ்பதி (ஹிந்தி) ஆகிய விருதுகளை அவர் பெற்றுள்ளார்.
1953ம் ஆண்டு அமெரிக்காவின் தாய்மை விருது (மதர்ஸ் அவார்ட்), சாதுரியம் / செயல்திறனில் சிறந்து விளங்கியதற்காக இத்தாலியின் இஸபெல்லா தி’ எஸ்தே விருது மற்றும் யேல் பல்கலைகழகத்தின் ஹாவ்லண்ட் நினைவு பரிசையும் அவர் வென்றுள்ளார்.
பிரஞ்ச் பொது மக்கள் கருத்து நிறுவனம் நடத்திய கணக்கெடுப்பு / வாக்குபதிவின்படி 1967 மற்றும் 1968 ம் ஆண்டுகளில் பிரஞ்ச் மக்களால் மிகவும் ரசிக்கப்பட்ட நபராக இருந்தார்.
1971ல் அமெரிக்காவின் சிறப்பு கேலப் வாக்கெடுப்பின்படி திருமதி இந்திரா காந்தி உலகிலேயே மிக அதிக மக்களால் விரும்பப்பட்ட பெண்மனி ஆவார். விலங்குகளின் பாதுகாப்புக்காக, 1971ல் அர்ஜன்டினா சொசைடி அவருக்கு கௌரவ டிப்ளமோ பட்டத்தை அளித்தது.
தி இயர்ஸ் ஆப் ச்லேஞ் (சவால்கள் நிறைந்த ஆண்டுகள்), (1966-69), தி இயர்ஸ் ஆப் எண்டேவர்ஸ் (முயற்சிகள் நிறைந்த ஆண்டுகள், 1969-72), 1975ல் இந்தியா (லண்டன்), 1979ல் ‘இந்தியா’ (லாஸேன்) போன்ற பல்வேறு உரைகளும், எழுத்துகளும் அவரின் பிரபலமான புத்தக வெளியீடுகளாகும்.
இந்தியா முழுவதும் மட்டுமல்லாமல் உலகளவிலும் அவர் பயணம் மேற்கொண்டுள்ளார். அண்டை நாடுகளான ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பூட்டான், பர்மா, சீனா, நேபாளம் மற்றும் இலங்கை (ஸ்ரீலங்கா) ஆகிய நாடுகளுக்கு அவர் பயணம் மேற்கொண்டுள்ளார். பிரான்ஸ், ஜெர்மன், பெட்ரல் ரிப்பளிக் ஆப் ஜெர்மன், கயானா, ஹங்கேரி, ஈரான், ஈராக், இத்தாலி போன்ற நாடுகளுக்கு அவர் அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்டார்.
அல்ஜிரியா, அர்ஜன்டினா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், பிரேசில், கனடா, சிலி, செக்கோஸ்லோவாகியா, பொலிவியா எகிப்து நாடுகளுக்கும் திருமதி. காந்தி பயணம் மேற்கொண்டுள்ளார்.
பல்வேறு ஐரோப்பிய நாடுகள், அமெரிக்க நாடுகள் மற்றும் ஆசிய நாடுகளான இந்தோனேஷியா, ஜப்பான், ஜமயக்கா, கென்யா, மலேசியா, மொரிசியஸ், மெக்ஸிகோ, நெதர்லாண்ட்ஸ், நியூசிலாந்,து, நைஜிரியா, ஓமன், போலாந்த், ரோமனியா, சிங்கப்பூர், சுவிஸ்சர்லாந்த், சிரியா, ஸ்வீடன், டான்ஸானியா, தாய்லாந்த், ட்ரினிடாட் மற்றும் டூபகோ, யுனைட்டட் கிங்டம், அமெரிக்கா, ஜிம்பாப்வே ஆகிய நாடுகளுக்கும் அவர் பயணம் மேற்கொண்டுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் தலைநகரத்திற்கும் (நியூயார்க்) பயணம் சென்றுள்ளார்.
இவருக்கு இரண்டு மகன்கள். ஒருவர் சஞ்சய் காந்தி, மற்றொருவர் ராஜீவ்காந்தி.