டெல்லி: நாட்டில் இதுவரை 35 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய சுகாதாரத்துறை கூறி உள்ளதாவது: கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5,70,000 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. நாட்டில் இதுவரை 35,00,027 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.

அதில் அதிகபட்சமாக 4,63,793 பேர் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள், அதற்கடுத்து ராஜஸ்தானில் 3,24,973 பேரும், கர்நாடகாவில் 3,07,891 பேரும் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

மகாராஷ்டிரா 2,61,320 பேருடனும் தடுப்பூசி பட்டியலில் இடம்பெற்று உள்ளது. நாட்டில் தற்போது கொரோனா பாதித்து சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 1.7 லட்சமாக குறைந்துள்ளது. இது மொத்த பாதிப்பில் 1.6 சதவீதமாகும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.