கோவை: கோவை மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 35 ஆயிரம் பேர் விடுவிக்கப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
கோவை மாவட்டத்தில் கொரோனா பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்து விட்டது. பலியானவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
தொற்று அதிகம் உள்ள பகுதிகளை கண்டறிந்து சுகாதாரத்துறையினர் தனிமைப்படுத்தி வருகின்றனர். மாவட்டம் முழுவதும் 31 இடங்கள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. அப்பகுதிக்குள் பொதுமக்கள் யாரும் செல்லாத வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன.
இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் வெளியூர்களில் இருந்து வருபவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறார்கள். கடந்த மார்ச் 25ம்  தேதியில் இருந்து இதுவரை தனிமைப்படுத்தப் பட்ட 35 ஆயிரம் பேர் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.
மேலும் 6 ஆயிரத்து 980 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்கள் வெளியே செல்லக்கூடாது என்று அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது என்று கூறினர்.