டில்லி:

விவசாய நிலையில்,  மின்கோபுரம் அமைக்கப்படுவதை எதிர்த்தும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தியும் டில்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த 23ந்தேதி போராட்டம் தொடங்கி உள்ள நிலையில் இன்று 3வது நாளாக தொடர்ந்து வருகிறது.

தமிழகத்தின் டெல்டா  மாவட்டங்கள் உள்பட பல மாவட்டங்களில் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் எடுக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதுபோல, வயல்வெளி வழியாக உயர்அழுத்த மின்சாரம் கொண்டு செல்லும் வகையில், உயர் மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், மத்தியஅரசின் மக்கள் விரோத செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவைச் சேர்ந்த தமிழக விவசாயிகள் 70 பேர் டில்லி ஜந்தர்மந்திரில் கடந்த 3 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.