பணம் கேட்டு நடிகை பூர்ணாவுக்கு மிரட்டல் விடுத்த நான்கு பேரை கேரள போலீஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு அன்வர் அலி என்பவர் பூர்ணாவுக்கு செல்போனில் அறிமுகமாகியுள்ளார். தான் கோழிக்கோட்டைச் சேர்ந்த மிகப்பெரிய நகைக்கடையின் முதலாளி என்று கூறி பழகியுள்ளார் .

பின்னர் அவர் குடும்பத்தினர் சிலர் பூர்ணாவின் வீட்டுக்கு வந்து பூர்ணாவைத் திருமணம் செய்துவைக்குமாறு கேட்டுள்ளனர்.

பின்னர் அவர்கள் சென்றதும் ஏதோ தவறாக இருப்பதாக உணர்ந்த பூர்ணாவின் பெற்றோர், சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்தபோது, அதில் அவர்கள் பூர்ணாவின் வீடு, கார், வீட்டில் வெளிப்புறப் பகுதி ஆகியவற்றை போட்டோ மற்றும் வீடியோ எடுத்திருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து அன்வர் அலியிடம் பூர்ணா கேட்டபோது, அவர் பூர்ணாவிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதனையடுத்து பூர்ணாவின் பெற்றோர் கொச்சி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

பூர்ணாவின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி வந்த கேரள போலீஸார் தற்போது ரபீக், ரமேஷ் கிருஷ்ணன், சரத் சிவதாசன், அஷ்ரப் சையது முஹம்மது என்ற 4 பேரைக் கைது செய்துள்ளனர். மேலும் அவர்கள் அன்வர் அலி என்ற போலியான பெயரைப் பயன்படுத்து பூர்ணாவிடம் பேசியது விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.