சேலம் அம்மாப்பேட்டை பகுதியில், டெம்போ டிரைவர் அடித்துக் கொல்லப்பட்டது தொடர்பாக 4 பேரை கைது செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் அம்மாப்பேட்டையை அடுத்த உடையாப்பட்டி எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார். டெம்போ டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் அந்த பகுதியில் சந்து கடையில் மது விற்பனை செய்யும் திலீப் என்பவரது வீட்டிற்கு சென்று மது பாட்டில்கள் வாங்கினார். அப்போது மீதி பணத்தை திலீப் கொடுக்க மறுத்ததால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

தகராறு முற்றியதும் ஆத்திரம் அடைந்த திலீப், அவரது மனைவி தேவி மற்றும் உறவினர்கள் சக்தி, ரமேஷ் ஆகியோர் சேர்ந்து சதீஷ்குமாரை கடுமையாக தாக்கினர். மேலும் தடுக்க வந்த சதீஷ்குமாரின் தந்தை ராமசாமி, தாய் இந்திராணி ஆகியோரையும் தாக்கினர். இதில் நிலைகுலைந்த சதீஷ்குமார் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து அம்மாப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். இதற்கிடையே கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி உடையாப்பட்டியில் சதீஷ்குமாரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் திலீப்பின் வீடு மற்றும் அங்கிருந்த மது பாட்டில்களையும் அடித்து உடைத்தனர். இதனால் அந்த பகுதியில் பதட்டம் நிலவியது.

கொலையாளிகளை கைது செய்ய இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தனிப்படை அமைத்து மாநகர போலீஸ் கமி‌ஷனர் சங்கர் உத்தரவிட்டார். அந்த தனிப்படையினர் கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். பின்னர் உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த திலீப், அவரது மனைவி தேவி மற்றும் உறவினர்கள் சக்தி, ரமேஷ் ஆகியோரை பிடித்தனர். நால்வரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில், மது பாட்டில் வாங்கி வந்ததால் ஏற்பட்ட தகராறு காரணமாக அவரை தாக்கி, கொலை செய்ததாக நால்வரும் ஒப்புக்கொண்டனர்.