சென்னை:

‘‘அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’ என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

கிருஷ்ண ஜெயந்தி விழா வரும் 14ம் தேதியும் (திங்கட்கிழமை), சுதந்திர தினம் 15ம் தேதியும் (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. மேலும், சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை விடுமுறையுடன் 2 அரசு விடுமுறைகள் வருவதால் சென்னையில் தங்கி படித்து வரும் மாணவர்கள், பணியாற்றுபவர்கள் சொந்த ஊருக்கு சென்று வர விரும்புவார்கள்.

இதனால் 11ம் தேதி சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரெயில்களிலும் முன்பதிவு முடிந்துவிட்டது. காத்திருப்போர் பட்டியலும் அதிகளவில் உள்ளது.

ஆம்னி பேருந்துகளின் கட்டணமும் அதிகளவில் உயர்த்தப்பட்டுள்ளது. இதில் டிக்கெட் முன்பதிவு இணையதளத்தில் கட்டண உயர்வு இடம் பெற்றுள்ளது. இதனால் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இது குறித்து போக்குரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று செய்தியார்களிடம் கூறுகையில், ‘‘ஆம்னி பேருந்துகள் மீது 18004256151 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் புகார் அளிக்கலாம். அதிக கட்டணம் வசூலித்தால் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு 980 அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கபடுகின்றன. 4 நாள் தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழக அரசு சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. டெண்டர் கோரியுள்ள 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வந்தவுடன் பழைய பேருந்துகள் மாற்றப்படும்’’ என்றார்.