மதுரை:
பிளாஸ்மா சிகிச்சையால்  மதுரையில் இதுவரை 4 பேர்  கொரோனாவிலிருந்து  முற்றிலும் குணமடைந்துள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர்  விஜயபாஸ்கர் கூறினார்.
தமிழகத்தில் கொரோனா  பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை  1,60,907  ஆக உயர்ந்துள்ளது. நிலையில்,  சென்னையைத் தொடர்ந்து, மாவட்டங்களிலும் தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக, மதுரை, விருதுநகர், தேனி, தூத்துக்குடி மற்றும் செங்கலபட்டு, திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவல் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், மதுரையில் கொரோனா தொற்று பரவலை தடுப்புபது குறித்து ஆய்வு நடத்த அங்கு சென்றுள்ள சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அங்குள்ள  தொழில் வர்த்தக சங்க கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கொரோனா விழிப்புணர்வு கையேட்டை வெளியிட்டார். அதனை வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பெற்றுக் கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்,  “மதுரையில் கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த மருத்துவர்கள் செவிலியர்கள் அதிகாரிகள் என அனைத்துத் துறையினரும் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். பொதுமக்கள் ஒத்துழைப்போடு கொரோனா தொற்று பரவ9ல குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா நோயாளிகளின் தேவைக்காக  மதுரை மருத்துவக் கல்லூரியில் கூடுதல் படுக்கை வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
கொரோனாவுக்கு பிளாஸ்மா சிகிச்சை நல்ல பலனை தந்துள்ளது.  இந்தியாவில் 44 இடங்களில் பிளாஸ்மா சிகிச்சைக்கு மருத்துவ கவுன்சில் அனுமதி வழங்கி உள்ளது. அதில்,  சென்னை, மதுரை, திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளும் அடங்கும் என்றார்.
மதுரை மருத்துவமனையில் கொரோனா பாதித்தவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள பிளாஸ்மா சிகிச்சையில்,  இதுவரை 4  குணமடைந்துள்ளனர் என்றார்.
பின்னர் செய்தியாளர்கள், அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் அரசு மருத்துவமனை யில் சிகிச்சை எடுக்க மறுப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினர்.
அங்கு பதில் அளித்த அமைச்சர்,  தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுப்பது என்பது அவரவர் விருப்பம் என்றவர்,  சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்து குணமாகி வீடு திரும்பியு இருப்பதாகவும் தெரிவித்தார்.