சென்னை:

றைந்த முதல்வர் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, தமிழகத்தில் குட்கா, பான் மசாலா போன்ற போதை பொருட்கள் விற்க தடை விதிக்கப்பட்டது. ஆனால், அமைச்சர்கள் மற்றும் காவல்துறை, சுகாதாரத்துறை அதிகாரி கள் கூட்டணி அமைத்து, லஞ்சமாக பணம் பெற்றுக்கொண்டு, திருட்டுத்தனமாக தமிழகம் முழுவதும் குட்காவை விற்பனை செய்து வந்தனர்.

இதுகுறித்து திமுக உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணையின்போது, போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெ. வீட்டில்,  சசிகலா தங்கியிருந்த அறையில் இருந்து, குட்கா விவகாரம் குறித்து அப்போதைய டி.ஜி.பி ராஜேந்திரன் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எழுதிய ரகசியக் கடிதம் கைப்பற்றப்பட்டதாக  வருமான வரித்துறை உயர்நீதி மன்றத்தில் தெரிவித்து இருந்தது.

இந்நிலையில், தற்போது 2வது முறையாக குட்கா ஊழல் குறித்து விசாரணை நடத்தி வரும் அதிகாரி மாற்றப்பட்டுள்ளார்.

குட்கா ஊழல் வழக்கில் ஏற்கனவே ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது  விசாரணை அதிகாரியாக நியமிக்கப் பட்ட ஜெயக்கொடியை எடப்பாடி தலைமையிலான அரசு கடந்த ஜனவரி மாதம்  மாற்றி, அவருக்கு பதிலா  லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் டிஜிபியாக மஞ்சு நாதாவை  விசாரணை அதிகாரியாக கடந்த ஆண்டு நியமனம் செய்தது.

இந்நிலையில் தற்போது மஞ்சுநாதாவும் மாற்றப்பட்டுள்ளார். இது வழக்கை இழுத்தடிக்கும் செயல் என்றும், அமைச்சர் மற்றும் காவல் அதிகாரிகளை காப்பாற்ற அரசு முயற்சித்து வருகிறது என்று ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளார்.

இதுகுறித்து திமுக செயல்தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

”தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை காப்பாற்றும் நோக்கத்தில், 40 கோடி ரூபாய் லஞ்சப் பரிமாற்றம் செய்யப்பட்ட குட்கா வழக்கை விசாரித்துக் கொண்டிருந்த லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் டிஜிபியாக இருந்த மஞ்சுநாதாவை, எவ்விதக் காரணமுமின்றி ஓராண்டு காலத்திற்குள்ளாகவே மாறுதல் செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

குட்கா வழக்கில் சிபிஐ விசாரணை கோரி திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை முடிந்து, தீர்ப்பிற்காக காத்திருக்கின்ற நேரத்தில் திடீரென்று அந்த விசாரணை அதிகாரியை மாற்றியுள்ளனர்.

இது, குறைந்தபட்சமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் லஞ்ச ஊழல் தடுப்புத்துறை விசாரணையையும் முடக்கி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரையும், தமிழ்நாடு காவல்துறை தலைவர் டி.கே.ராஜேந்திரனையும் தப்பவைக்க மேற்கொள்ளும் அப்பட்டமான முயற்சி என்றே தெரிகிறது.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, சுதந்திரமான விஜிலென்ஸ் விசாரணைக்கு உத்தரவிட்டு, அந்த விசாரணையை மேற்கொள்ள விஜிலென்ஸ் ஆணையராக வி.கே.ஜெயக்கொடி நியமிக்கப்பட்டார். விசாரணை மேற்கொண்டிருந்த ஜெயக்கொடியை கடந்த ஜனவரி 8 அன்று மாற்றியது அதிமுக அரசு.

இப்போது அந்த விஜிலென்ஸ் ஆணையத்தின் கீழ் இயங்கும் லஞ்ச ஊழல் தடுப்புத்துறையின் கூடுதல் டிஜிபியை யும் மாற்றியுள்ளது. இதிலிருந்து, குட்கா வழக்கு தொடர்பான அனைத்து விசாரணைகளுக்கும் மூடுவிழா நடத்துகிறது அதிமுக அரசு என்பது தெளிவாகியுள்ளது.

ஏற்கெனவே குட்காவில் தொடர்புடைய அதிகாரிகள், அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தலைமைச் செயலாளருக்கு வருமான வரித்துறை அனுப்பிய கோப்பையே காணவில்லை என்றார்கள். அப்படி காணாமல் போன கோப்பிற்கு காரணமான அதிகாரிகள் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதிலிருந்தே, கோப்பு காணவில்லை என்பது இட்டுக்கட்டிக் கூறப்பட்டது என்று புலப்படுகிறது.

இப்போது விஜிலென்ஸ் ஆணையர், லஞ்ச ஊழல் தடுப்புப் பிரிவு கூடுதல் டிஜிபி என்று விசாரணை அதிகாரி களையும் மாற்றும் அதிமுக அரசின் நடவடிக்கை நிர்வாக நடைமுறைகளுக்கு மாறானது, அராஜகமானது மட்டுமல்ல, உயர் நீதிமன்ற உத்தரவுகளை மீறிய செயலாகும்.

இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் குட்கா வழக்கு விசாரணையை சிபிஐயிடம் ஒப்படைக்கவேண்டும் என்று திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

ஏனென்றால் அதிமுக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள விஜிலென்ஸ் ஆணையமோ, லஞ்ச ஒழிப்புத் தடுப்புத் துறையோ குட்கா ஊழலில் ஈடுபட்டுள்ள அமைச்சர் மீதோ, காவல்துறை டிஜிபிக்கள் மீதோ நடவடிக்கை எடுக்க முடியாது என்பது அனைவருக்கும் தெரியும்.

ஆகவே, உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள குட்கா வழக்கில் தீர்ப்பு வருவதற்குள், அதுதொடர்பான விசாரணை அதிகாரிகளை மாற்றி, குட்கா சம்பந்தப்பட்ட கோப்புகளை மறைக்கும் அதிமுக அரசும், அதற்கு துணைபோகும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், 40 கோடி குட்கா ஊழலுக்கும், மாநிலத்தில் நடைபெறும் சட்டவிரோத குட்கா விற்பனைக்கும் நிச்சயம் பதில் சொல்ல வேண்டிய சூழ்நிலை வரும் என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்

அந்த சமயத்தில் இதுபோன்ற டிரான்ஸ்பர்களுக்கு துணைபோகும் உயரதிகாரிகளும் விசாரணை வளையத்திலிருந்து நிச்சயம் தப்பமுடியாது.

இவ்வாறு ஸ்டாலின் கூறி உள்ளார்.