டில்லி
ஊரடங்கினால் 40% இந்திய ஊழியர்கள் மன அழுத்தத்தில் உள்ளதாக ஆய்வுத் தகவல் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உலகெங்கும் உள்ள அனைத்து நாடுகளிலும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பலர் பணி இழந்துள்ளனர். பெரும்பாலான ஊழியர்கள் ஊதிய குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலை இந்தியாவிலும் அதிக அளவில் உள்ளது.
உலக மனநல தினத்தையொட்டி லிங்க்ட் இன் என்னும் வேலை வாய்ப்பு சமூக வலைத் தளம் ஆய்வு ஒன்றை நடத்தியது. அந்த ஆய்வில் இந்தியப் பணியாளர்களில் 5 இல் 2 பேர் அதாவது 40% பேர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்த மன அழுத்தம் கொரோனா ஊரடங்குக்குப் பிறகு ஏற்பட்டுள்ளதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது. மேலும் இதற்குப் பணி உறுதியின்மை, பொருளாதார நெருக்கடி, வேலைப்பளு அதிகரிப்பு, தனிமை உள்ளிட்டவை முக்கிய காரணங்கள் என ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.