சென்னை:

கொரோனா ஹாட்ஸ்பாட்டாக சென்னையில் சில பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் பரவலை தடுக்கும் வகையில் வீடு வீடாக ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

இதில்,  4,787 பேருக்கு சளி, காய்ச்சல், இருமல் போன்ற சிறு பாதிப்புகள் உள்ளது தெரிய வந்துள்ளதாக  சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

டெல்லி தப்லிகி மாநாட்டுக்கு சென்று வந்தவர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. சென்னையில் ஷாகின்பாக் போராட்டம் நடத்திய ராயபுரம் பகுதி கொரோனா ஹாட் ஸ்பாட்டாக அறிவிக்கப்பட்டு, சீல் வைக்கப்பட்டு உள்ளது. மேலும் பல பகுதிகளும் கொரோனா தொற்று காரணமாக முடக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து,  சென்னை மாநகராட்சி சார்பில், சென்னையில் உள்ள 15 மண்டலங்களி லும் கொரோனா தொற்று  குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.  இந்த பணியில்  10,566 பணியாளர்கள் நியமிக்கப்பட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த ஆய்வில் கிடைக்கப்பெற்ற தகவல்கள் குறித்து சென்னை மாநகராட்சி அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில்,” சென்னையில் இது வரையிலும் 4,787 பேருக்கு சளி, காய்ச்சல் போன்ற சிறு பாதிப்புகள் உள்ளது. இவர்களில் 4,094 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். எஞ்சியுள்ள 693 பேர் தொடர் கண்காணிப்பில் உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.