டெல்லி : நாடு முழுவதும் இன்று கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ள நிலையில், பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமான  பாரத் பயோடெக் 16.5 லட்சம் டோஸ் கோவாக்சின்  தடுப்பூசி மருந்தை  மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கி அசத்தி உள்ளது. தமிழகத்திற்கு 5.36 டோஸ் மருந்து இலவசமாக வழங்கப்படுகிறது. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

உலகின் மிகப்பெரிய எண்ணிக்கையில் தடுப்பூசி போடும் திட்டத்தை மத்திய அரசு இன்று (ஜனவரி 16) தொடங்கவுள்ளது. உள்நாட்டு தயாரிப்பான கோவிட்-19 தடுப்பூசிகளை நாடு முழுவதும் உள்ள 2,934 மையங்களின் வாயிலாக மக்களிடையே மத்திய அரசு கொண்டு சேர்க்கவுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தை ஐதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் கோரோனா வைரஸ் தடுப்பு மருந்து மருந்தை தயாரித்துள்ளது.  இந்த மருந்தை பயனர்களுக்கு வழங்க மத்தியஅரசு அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி மருந்துகளை மாநிலங்களுக்கு அனுப்பி வருகிறது.

இந்த நிலையில், கொரோனா வைரஸுக்கு எதிரான போரில, தங்களை ஈடுபடுத்திக்கொண்டு, சேவையாற்றிய மருத்துவர்கள்,  சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு 16.5 லட்சம் டோஸ் மருந்துகளை விலையில்லாமல் வழங்கி அசத்தி உள்ளது.

முதல்கட்டமாக, 55 லட்சம் டோஸ்  கோவாக்சின் தடுப்பு மருந்தை பாரத் பயோடெக் நிறுவனம், மத்திய அரசுக்கு  வழங்கியுள்ளது. இதில், 16.5 லட்சம் டோஸை நாட்டு மக்களின் நலன் கருதி விலையில்லாமல் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில், தமிழகத்திற்கு 5.36 டோஸ் மருந்துகள் வழங்கப்பட்டு உள்ளது.

அதன்படி, ராஜஸ்தான், தமிழ்நாடு, டெல்லி, மகாராஷ்டிரா, பிகார், கர்நாடகா, ஒடிஸா, உத்தரப் பிரதேசம், ஆந்திரப்பிரதேசம், ஹரியானா ஆகியவை கோவாக்சினை பயன்படுத்த ஒப்புதல் தெரிவித்துள்ளன. இந்த 10 மாநிலங்களுக்கும் ஏற்கனவே 20 ஆயிரம் டோஸ் கோவாக்சின் மருந்தினை கையளிக்கப்பட்டுள்ளது. அஸ்ஸாம் மாநிலத்திற்கு மட்டும் 12 ஆயிரம் டோஸ் வழங்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்திய அரசு அனுமதி வழங்கியுள்ள கோவிஷீல்டு  மருத்துக்கு ரூ. 200 விலை வரையறுத்துள்ள நிலையில், பாரத் பயோடெக் கோவாக்சினுக்கு 295 ரூபாய் விலை நிர்ணயித்துள்ளது குறிப்பிடத்தக்கது.