a
திருப்பூர்: திருப்பூர் அருகே  தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளால் பிடிபட்ட , பண கன்டெய்னர்கள்  குறித்து  அதிர்ச்சி  தகவல்கள் வெளியாகி உள்ளன.
“மூன்று கன்டெய்னர்கள் பிடிபட்டுள்ளன. ஆனால் மொத்த எட்டு கன்டெய்னர்களில் பணம் எடுத்துச் செல்லப்பட்டது. ஆக ஐந்து கன்டெய்னர்கள் தப்பிவிட்டன” என்று தகவல் வெளியாகி உள்ளது.
நேற்று நள்ளிரவு ஒரு மணி அளவில் கோவையில் இருந்து சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், மூன்று கன்டெய்னர் லாரிகளும், மூன்று இன்னோவா கார்களும் அடுத்தடுத்து வந்தன.  சந்தேகம் அடைந்த அதிகாரிகள்,  அந்த வாகனங்களை சோதனை செய்தனர்.
‘கோவை ஸ்டேட் வங்கியில் இருந்து விசாகப்பட்டினத்திற்குப் பணம் கொண்டு செல்லப்படுகிறது. இது ரிசர்வ் வங்கியின் பணம்” என்று கன்டெய்னரில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.   இன்னோவா கார்களில் யூனிபாஃர்ம் அணியாமல்  ஆந்திர போலீஸார் இருந்ததனர்.
கன்டெய்னர் லாரிகள், இன்னோவா கார்களை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். . மொத்தம் 570 கோடி ரூபாய் பிடிபட்டிருப்பதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தற்போது, ” பறக்கும் படை சோதனையில் மூன்று கன்டெய்னர்கள்தான் பிடிபட்டன.. ஆனால், கடந்த சில நாட்களில் மட்டும் ஐந்து கன்டெய்னர்கள் ஐதராபாத் சென்றுள்ளன. . ஆந்திரா போலீஸார் ஏன் இருந்தார்கள்? ஐதராபாத்துக்கு பணத்தை அனுப்பச் சொன்ன அரசியல் புள்ளி யார் என்பதெல்லாம் தெரியவில்லை.
இந்த பண விவகாரத்தில் தமிழகத்தின் மூத்த முக்கியப் புள்ளி ஒருவர் உள்ளார்.  அவரது உத்தரவின்பேரில்தான் இந்த வாகனங்கள் ஐதராபாத் சென்றன. தேர்தலுக்கு  பின்பே இந்தப் பணம் அனுப்பப்பட இருந்தது.  ஆனால். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, ‘கன்டெய்னர்களை அனுப்ப முடியுமா?’ என்ற யோசித்து, முன்னதாகவே அனுப்ப முனைந்தார்கள். தீவிரமாக.. நியாயமாக விசாரித்தால் அதிர்ச்சிகரமான பல உண்மைகள் வெளிவரும்” என்று  அரசியல் வட்டாரத்தில் ஒரு பேச்சு உலவுகிறது.
ஸ்டேட் வங்கி அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது,  “கன்டெய்னர்களின் அனுப்பப்பட்ட பணம் ரிசர்வ் வங்கிக்குச் சொந்தமானதுதான். ஒவ்வொரு முறையும் ஸ்டேட் வங்கிகளில் கூடுதலாக பணம் இருந்தால், எந்த ஊரில் தேவை இருக்கிறதோ அங்கு அனுப்புவது வழக்கம். அதன்படி  ஒரு வாரத்திற்கு முன்பே, ‘ஐதராபாத்துக்கு பணம் அனுப்ப வேண்டும்’ என ரிசர்வ் வங்கியில் இருந்து உத்தரவு  வந்தது. ‘தேர்தல் நடப்பதால் அனுப்ப முடியாது’ எனத் தெரிவித்தோம். ஆனாலும், ‘பணத்தை அனுப்பியே ஆக வேண்டும்’ என அதிகாரிகள் வலியுறுத்தி கூறியதால் ஐதராபாத்துக்கு பணம் அனுப்பினோம்” என்று கூறப்படுகிறது.