ராஜ்காட்: குஜராத் மாநிலம் ராஜ்காட் பகுதியில் உள்ள கொரோனா மருத்துவமனையில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இதில்,  5 நோயாளிகள் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதி மாவ்டி பகுதியில்உள்ளது  உதே சிவானந்த்  மருத்துவமனை. தற்போது, இந்த மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் உள்ள ஐசியு பிரிவில் நள்ளிரவு 1 மணி அளவில் திடீர்  தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட மருத்துவ பணியாளர்கள், மற்ற வார்டுகளில் உள்ள நோயாளிகளையும் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தின்போது, 33 பேர் மருத்துவனையில் இருந்ததாக தெரிகிறது.  ஐசியுவில் மட்டும் 11 பேர் இருந்த நிலையில், அவர்களை உடனே மீட்க முடியாத நிலையில், தீ மளமளவென பரவியதால், 5 நோயாளிகள் தீயில் சிக்கி இறந்ததாக கூறப்படுகிறது.  3 பேர் ஐசியுக்குள்ளே இறந்ததாகவும், 2 பேர் வெளியேற்றப்பட்ட நிலையில் இறந்து உள்ளதாகவும், மற்றவர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டு உள்ளனர். மீட்கப்பட்ட அனைவரும் அருகில் உள்ள மற்றொரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், மருத்துவமனை முழுவதும் தீ பரவுவதற்குள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இந்த திடீர் தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்துக்கான காரணத்தை கண்டறியுமாறு குஜராத் முதல்வர் விஜய் ரூபானி உத்தரவிட்டுள்ளார்.