டில்லி,

நாடு முழுவதும் இந்த மாதம் 1ந்தேதி முதல் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்டு உள்ளது.

ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையில் பில் இல்லாமல் பொருட்கள் விற்பனை செய்தாலோ அல்லது வரி ஏய்ப்பு செய்தாலோ 5 ஆண்டுகள்  சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என மத்திய அரசு வணிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜிஎஸ்டி காரணமாக நாடு முழுவதும் வணிகர்களிடையே பெரும் அதிருப்தி நிலவி வரும் நிலையில், தற்போது பில் இல்லாமல் விற்பனை செய்தால் கைது என்று மத்திய அரசு மிரட்டி உள்ளது.

இதுகுறித்து, மத்திய அரசின்,  இந்திய கம்பெனி செயலர் மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது,

அதில்,  வரி ஏய்ப்பு செய்யும் நோக்கத்துடன், உரிய பில் இல்லாமல் பொருட்களை அனுப்பினாலோ அல்லது விற்பனை செய்தாலோ, அது குற்றமாக கருதப்படும் என கூறப்பட்டுள்ளது.

அதேபோல்,எந்தப் பொருளையும் விற்காமல், போலியான பெயரில் பில் தயாரித்தலும் குற்றம் என்றும்,  ஜிஎஸ்டியை வசூலித்துவிட்டு, மூன்று மாதங்கள் வரை அதை அரசுக்கு செலுத்தாமல் இருப்பதும் குற்றமாகும்.

இவ்வாறு வரி எய்ப்பு செய்பவர்களுக்கு 5 கோடி ரூபாய் வரையிலான குற்றங்களுக்கு, மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், 5 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்தது தொடர்பான குற்றங்களுக்கு, ஐந்து ஆண்டுகள் வரை சிறையும், அபராதமும் விதிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.