இந்தூர்: வெறும் 4 நிமிடங்களில், மொத்தம் 150 நாடுகளின் கொடிகள் மற்றும் தலைநகரங்களை மனப்பாடமாக கூறி, உலக சாதனை புரிந்துள்ளார் இந்தியாவின் 5 வயது சிறுமி ஒருவர். அவரின் பெயர் பிரஷா.

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜெய்னியை சேர்ந்தவர் அவர். கொரோனா முடக்கத்தின்போது, அந்த சிறுமிக்கு, உறவினர்களிடமிருந்து ‘வேர்ல்ட் புக்’ கிடைத்துள்ளது. இதன்மூலம் அவரின் ஆர்வம் அதிகரித்துள்ளது.

நாடுகளின் கொடிகள் மற்றும் தலைநகரங்கள் குறித்த விபரங்களைப் படித்து, மனப்பாடம் செய்து வைத்துள்ளார்.

இதனையடுத்து, வெறும் 4 நிமிடங்கள் மற்றும் 17 விநாடிகளில், 150 நாடுகளின் தலைநகரங்கள் மற்றும் கொடிகளை மனப்பாடமாக கூறி, புதிய உலக சாதனைப் புரிந்துள்ளார் அச்சிறுமி.

அடுத்ததாக, பல்வேறு நாடுகளின் நாணயங்கள், மொழிகள் மற்றும் அந்நாடுகளின் பிரதமர்கள், ஜனாதிபதிகள் ஆகியோரின் பெயர்களைக் கற்றுக்கொள்வது தனது அடுத்த குறிக்கோள் என தெரிவித்துள்ளார் பிரஷா.