மதுரை:

மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் 500 பேருக்கு போலி சான்றிதழ் வழங்கப்பட்டது குறித்து, லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மாணவ-மாணவிகள், ஆராய்ச்சியாளர்கள் படித்து வருகிறார்கள்.

இது தவிர தொலைதூர கல்வித்துறை சார்பில் நாடு முழுவதும் அலுவலகங்கள் ஏற்படுத்தப்பட்டு இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள் நடத்தப்படுகிறது.

பல ஆண்டுகளாக தொலைதூர கல்வித்துறையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக புகார்கள் எழுந்தன.

இது தொடர்பாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார்கள் அனுப்பப்பட்டன. இந்த புகார் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் முதல் கட்ட விசாரணை நடத்தினர்.

இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் கூறியதாவது;

மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள தொலைதூர கல்வி இயக்கக அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது.

அப்போது, கடந்த 2014-15-ம் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கையில் பல்வேறு முறைகேடுகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டன.

பட்டப் படிப்பில் சேர விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாளான 2013-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி பி.காம். பட்டப் படிப்புக்கு 321 மாணவர்கள் விண்ணப்பித்ததாக தெரிகிறது.

மேலும் 253 மாணவர்கள் விண்ணப்பத்தில் சுயகுறிப்புகளை தெரிவிக்காமல் தங்களது புகைப்படம் மற்றும் முகவரியை மட்டுமே குறிப்பிட்டுள்ளனர்.

பல விண்ணப்பங்களில் மாணவரின் பெற்றோர், தொலைபேசி எண்கள், புகைப்படம், முகவரி உள்ளிட்ட எந்த தகவல்களும் குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பதாரரின் பெயர் மட்டுமே அதில் இடம் பெற்றுள்ளது. ஆனால் அவர்களுக்கு படிப்பதற்கு அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான விசாரணையை தொடங்கியுள்ள லஞ்ச ஒழிப்பு போலீசார், பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்ககத்தில் உள்ள ஆவணங்களை கைப்பற்றி விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

பல மாணவர்கள் கல்வி கட்டணம்கூட செலுத்தவில்லை. 500-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் புரோவிசனல் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஆனால் அவர்கள் தேர்வு கூட எழுதியதற்கான ஆதாரம் இல்லை.

ஒவ்வொரு மாணவருக்கும் முறைகேடாக போலியான சான்றிதழ்களை வழங்க பெரும் தொகை கைமாறியதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த விவகாரத்தில் முறைகேட்டுக்கு உடந்தையாக இருந்தவர்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

தொலைதூர கல்வி இயக்ககத்தின் கூடுதல் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ராஜராஜன், கணினி பிரிவு கண்காணிப்பாளர் சத்தியமூர்த்தி மற்றும் கார்த்திகைசெல்வன் ஆகிய 3 பேரிடமும் இதுதொடர்பாக விசாரித்துள்ளோம்.

கூடுதலாக சில முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதால் மீண்டும் விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளோம் என்றனர்.

இதுதொடர்பாக சிறப்பு சிண்டிகேட் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.