சபரிமலை பகுதியில் 15 கேன்களில் நிரப்பப்பட்டு இருந்த 500 கிலோவுக்கும் அதிகமான வெடி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கேரள மாநிலம், சபரிமலையில் தற்போது நடை திறந்திருப்பதால், பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்த நிலையில் சபரிமலை, பாண்டித்தாவளம் பகுதியில் கேன்களில் வெடி மருந்துகள் புதைத்து வைக்கப்பட்டு இருப்பதாக பத்தனம்திட்டா காவல் கண்காணிப்பாளர் சபேஸ் பினாய்க்கு தகவல் கிடைத்தது.

உடனடியாக அவர், விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து சபரிமலை சன்னிதான எஸ்.ஐக்கள் பிரதீஷ், ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு நடத்தினர். அப்போது பாண்டித்தாவளம் பகுதியில் 15 கேன்களில் தலா 35 கிலோ வீதம் வெடி மருந்துகள் இருப்பது தெரிய வந்தது.

இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் இந்த வெடி மருந்துகள், சபரிமலையில் நடக்கும் வெடி வழிபாட்டுக்கானது எனத் தெரிய வந்தது. சபரிமலையில் வெடி வழிபாடு ஏலம் எடுத்தவர் தினசரி 15 கிலோ மட்டுமே வெடி மருந்தை வைத்திருக்க அனுமதி உண்டு. இதனால் வெடி மருந்தை மொத்தமாக இப்பகுதியில் பதுக்கி வைத்து கொஞ்சம், கொஞ்சமாக எடுத்து பயன்படுத்தி வந்தது தெரிய வந்தது.

இது தொடர்பாக காவல் துறை வட்டாரத்தில் கேட்ட போது,’’சபரிமலை செல்லும் வழியில் மலைப் பகுதியில் ஒரு கொட்டகை அமைத்து இந்த வெடி வழிபாடு நடப்பது வழக்கம். கட்டணம் செலுத்துவோருக்கு அவரது பெயரையும், நட்சத்திரத்தையும் சொல்லி ஒரு வெடி வெடிப்பார்கள்.

தற்போது திருவனந்தபுரத்தை சேர்ந்த பவனன் சுதீர் என்பவர் வெடி வழிபாட்டுக்கான ஏலத்தை எடுத்துள்ளார். இது வனப் பகுதி என்பதால் 15 கிலோவுக்கு அதிகமாக வெடி மருந்து வைத்து, வெடி வழிபாடு செய்ய அனுமதியில்லை. ஒவ்வொரு முறையும் மலைப் பகுதியில் இருந்து கீழே சென்று வெடி மருந்துகளை எடுத்து வர வேண்டியிருக்கும்.

ஆகவே ஒப்பந்ததாரர் பாண்டித்தாவளம் பகுதியில் மறைவாக கூடுதல் வெடிபொருள்களைப் பதுக்கி வைத்துள்ளார். ஆனால் இது சட்டப்படி தவறு. வெடி மருந்துகளை பதுக்கி வைத்திருந்த இடத்தின் அருகிலேயே சரியாக 15 மீட்டரில் குப்பைகளை எரிக்கும் இடம் உள்ளது. ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால் பெரும் விபத்து ஏற்படும்.

அதிலும் ஏற்கனவே சபரிமலைக்கு வரும் ஜயப்ப பக்தர்களுக்கு ரயில் நிலையக் குடிநீர் தொட்டிகளில் சில விஷமிகள் விஷம் கலக்கும் வாய்ப்பு இருப்பதாக ஒரு தகவல் பரவி பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்போது ஒப்பந்ததாரரை விசாரித்து வருகிறோம்” என்று தெரிவித்தனர்.