சென்னை: தமிழகத்தில் இன்று புதியதாக 508 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.
தமிழகத்தில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவலை நாள்தோறும் சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாகிக் கொண்டே வருகிறது.
இந் நிலையில் இன்று மட்டும் 508 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 4058ஆக உயர்ந்துள்ளது.

இன்று கொரோனாவால் பாதிப்பு அடைந்த 508 பேர்களில் சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 279 பேர்கள். இதன்மூலம் சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2008ஆக உயர்ந்துள்ளது.
கடலூரில் 68 பேர், செங்கல்பட்டு மற்றும் கள்ளக்குறிச்சியில் தலா 38 பேர், விழுப்புரத்தில் 25 பேர், திருவள்ளூரில் 18 பேர், நாமக்கல்லில் 15 பேர், திண்டுக்கல்லில் 7 பேர், திருப்பத்தூரில் 5 பேர், தர்மபுரி, காஞ்சிபுரம், பெரம்பலூர், சேலம், தென்காசி, நெல்லை, திருச்சி மற்றும் விருதுநகரில் தலா ஒருவர் கொரோனாவால் இன்று பாதிப்பு அடைந்துள்ளனர்.

கொரோனாவுக்கு இன்று மட்டும் 2 பேர் பலியாகி உள்ளனர். இதையடுத்து, பலி எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 1,65,191 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இன்று மட்டும் 11,702 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.