டில்லி:

ட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ள மகாராஷ்டிரா, அரியானா ஆகிய மாநிலங்களில் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி அளவில் தொடங்கியது. வாக்குப்பதிவை முன்னிட்டு  இரு மாநிலங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த இரு மாநிலங்கள் உள்பட 18 மாநிலங்களில் 51 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், 2மக்களவைத் தொகுதிகளுக்கும் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது.  இங்கு காலை 7 மணி அளவில் வாக்குப்பதிவு தொடங்கியது.

288 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க. 164 இடங்களிலும், சிவசேனா 124 இடங்களிலும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. எதிர்க்கட்சி கூட்டணியில் காங்கிரஸ் 147 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸ் 121 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. மேலும், ராஜ்தாக்கரேயின் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா, பகுஜன் சமாஜ் கட்சி ஆகிய கட்சிகளும் போட்டியிடுகின்றன.

இந்த தேர்தலில் 3,237 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அங்கு 8 கோடியே 98 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். தேர்தல் அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக, மாநில காவல்துறையினர், மத்தியப் படையினர் என 3 லட்சம் பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

90 தொகுதிகளைக் கொண்ட அரியானா சட்டப்பேரவைக்கு நடைபெறும் தேர்தலில் பா.ஜ.க., காங்கிரஸ், சவுதாலாவின் ஜனநாயக ஜனதாக் கட்சி ஆகியவை அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. பகுஜன் சமாஜ், லோக்தளம் ஆகிய கட்சிகளும் பெரும்பலான தொகுதிகளில் போட்டியிடுகின்றன. 1169 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.  . ஒரு கோடியே 83 லட்சம் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய காத்திருக்கின்றனர்.  தேர்தலுக்காக மாநிலம் முழுவதும் 75 ஆயிரம் வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது. மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. அனைத்து இடங்களிலும் வாக்கு எண்ணிக்கை வரும்  24ந் தேதி நடைபெற உள்ளது.

அரியானா, மகாராஷ்டிராவில் ஆட்சியை பிடிக்கப்போவது யார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.