சென்னை:

தீபாவளி பண்டிகையையொட்டி, பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல அரசு சிறப்பு பேருந்து இயக்கும் நிலையில்,  அரசுப் பேருந்துகளில் பயணம் செய்வதற்கான டிக்கெட் முன்பதிவு ஜரூராக நடைபெற்று வருகிறது. இதுவரை, 52 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் பொதுமக்களின் வசதிக்காக சென்னையில் இருந்து  10ஆயிரத்து 940 சிறப்பு பேருந்துகள் உள்பட மொத்தம் 21ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஏற்கனவே தெரிவித்து உள்ளார்.

இந்த நிலையில் தீபாவளி முன்பதிவு நடைபெற்று வருகிறது. சென்னையில் முன்பதி செய்யும் கவுண்டர்களில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதுவரை  51 ஆயிரத்து 208 பயணிகள் முன்பதிவு செய்துள்ளதாக போக்குவரத்துத்துறை முதன்மைச் செயலர் சந்தரமோகன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து பிற ஊர்களுக்குச் செல்ல 33 ஆயிரத்து 870 பேரும், மற்ற இடங்களில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்ல 17 ஆயிரத்து 338 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர்.

இதன் மூலம் தமிழக போக்குவரத்து துறைக்கு  2 கோடியே 55 ஆயிரம் ரூபாய் வரை வசூலாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், www.tnstc.in, www.redbus.in, www.paytm.com, www.busindia.com என்ற இணையதளங்களிலோ அல்லது கோயம்பேடு, தாம்பரம் உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கவுண்டர்களிலோ முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.