ஐதராபாத்:

மத்திய அரசின் என்ஐஎஃப்டி  நிறுவன ஊழியர் மீது பாலியல் புகார் கூறிய 56 பெண் தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.


தி நியூஸ் மினிட் இணையம் வெளியிட்ட செய்தியின் விவரம்:

மத்திய அரசின் கீழ் இயங்கும் தன்னாட்சி நிறுவனமான நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஃபேஷன் (என்ஐஎஃப்டி  ) டெக்னாலஜி ஐதராபாத் உட்பட பல மாநிலங்களில் இயங்கி வருகிறது.

ஐதராபாத்தில் உள்ள எஎன்ஐஎஃப்டி-யில் பணியாற்றும் ஊழியர் டி.ஸ்ரீநிவாச ரெட்டி மீது கடந்த ஓராண்டாக தொடர்ந்து பாலியல் புகார் கூறப்பட்டு வந்தது.

தனியார் ஏஜென்ஸிகள் மூலம் அலுவலக பராமரிப்புப் பணிக்காக பெண்கள் இங்கு வேலையில் அமர்த்தப்படுகிறார்கள்.

இவர்களிடம் ஸ்ரீநிவாச ரெட்டி தொடர்ந்து வரம்பு மீறி நடந்து கொண்டதாக புகார் எழுந்தது, இது குறித்து நிர்வாகத்திடம் முறையிட்டும் பயன் இல்லை.

அவரது தொந்தரவு தொடர்ந்து கொண்டே இருந்தது. இந்நிலையில், அங்கு பணியாற்றிய பெண்கள் போலீஸில் புகார் கொடுத்தனர்.

இதனையடுத்து, கடந்த 8 மாதங்களாக ஸ்ரீநிவாச ரெட்டி தலைமறைவாக இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர். அவர் மீது பாலியல் துன்புறுத்தல் வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

எனினும், அதே வளாகத்தில் அவர் பணியாற்றிக் கொண்டிருப்பது பாதிக்கப்பட்ட ஒப்பந்த பெண் தொழிலாளர்களுக்கு தெரியவந்தது.

இந்த புகார் குறித்து டெல்லியிலிருந்து குழு ஒன்று வந்து விசாரணை நடத்தியது. எல்லா ஊழியர்களிடமும் அவர்கள் விசாரணை நடத்தினர்.
7 மாதங்களுக்குப் பிறகு பாலியல் துன்புறுத்தல் ஏதும் நடக்கவில்லை என்று ஐதராபாத் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனையடுத்து, ஸ்ரீநிவாச ரெட்டி பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி ஒப்பந்த பெண் தொழிலாளர்கள் வீதியில் இறங்கி போராடினர்.
இந்நிலையில், பாலியல் புகார் கொடுத்த 56 ஒப்பந்த பெண் தொழிலாளர்களை பணி நீக்கம் செய்து என்ஐஎஃப்டி   உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதாவது, ஆட்களை பணியமர்த்தும் தனியார் நிறுவனத்துக்கு கொடுத்த டெண்டரை என்ஐஎஃடி ரத்து செய்தது.

மேலும், இந்த தனியார் நிறுவனம் புதிதாக பெண்களை என்ஐஎஃப்டி-க்கு வேலைக்கு அனுப்பிவிட்டது.

பாலியல் புகார் கொடுத்த பெண்கள் நிலைமை தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.
என்ஐஎஃப்டி   இயக்குனர் ஜெனராக இருப்பவர் ஒரு பெண். இந்த விவகாரம் அவரை எட்டியதா என்று தெரியவில்லை. அவர் எங்களுக்கு நியாயம் வழங்குவார் என்று எதிர்பார்கின்றோம் என்கின்றனர் பாதிக்கப்பட்ட ஒப்பந்த பெண் தொழிலாளர்கள்.