டில்லி,

லைநகர் டில்லியில் தமிழக விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் இன்று 58வது நாளாக தொடர்ந்து வருகிறது.

இன்றைய போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகள் 28 பேரும் கைது செய்யப்பட்டு காவல்நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளனர்

தலைநகர் டில்லியின் ஜந்தர் மந்திரில் போராடி வரும் தமிழக விவசாயிகள் இன்றைய போராட்டத்தின்போது மோடி, விவசாயிகளின் கோவணத்தை உருவுவதாக நடித்துக்காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாய கடன் தள்ளுபடி, விளைபொருட்களுக்கு லாபகரமான விலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழக விவசாயிகள் டில்லி ஜந்தர்மந்தரில் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

ஏற்கனவே மண்டை ஓடுகள் எலும்புகளை தின்றும், இலைதழைகளை அணிந்தும், தொழு நோயாளிகள் போன்று வேடமிட்டும், மண்சோறு சாப்பிட்டும்,  சாமியார் போன்றும் என  ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு முறையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளின் போராட்டம் இன்றோடு 58வது நாளை எட்டியுள்ளது.

இன்றைய போராட்டத்தின்போது,  தமிழக விவசாயிகளின் கோவணத்தை பிரதமர் மோடி அவிழ்ப்பது போன்று சித்தரித்து போராட்டம் நடத்தினர். இதைக்கண்ட டில்லி போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட  அய்யாக்கண்ணு உள்பட 28 விவசாயிகளையும் கைது செய்தனர்.

அவர்களை அனைவரும் தற்போது டில்லி பாராளுமன்ற வளாக போலீஸ் நிலையத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.