டில்லி:

5 நாட்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி இன்று காலை தனி விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றார். அவர், பிரான்ஸ் மற்றும் அரபு நாடுகளுக்கு செல்வதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

2வது முறையாக பிரதமர்  பதவி ஏற்ற மோடி, மீண்டும் தனது வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை தொடங்கி உள்ளார். இன்று  பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் ஆகிய நாடுகளுக்கு 5 நாட்கள் பயணமாக  புறப்பட்டு சென்றார்.

மோடியின் இந்த  பயணம் இந்தியாவுக்கும், இந்த 3 நாடுகளுக்கும் இடையிலான நட்புறவையும், கூட்டுறவையும் புதிய உயரத்துக்கு எடுத்துச்செல்லும் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இன்று காலை புறப்பட்ட பிரதமர் மோடி, நேராக பிரான்ஸ் செல்கிறார். 2 நாட்கள் அங்கு தங்கி பல்வேறு தலைவர்களை சந்தித்து பேசும் மோடி, பின்னர் 23ந்தேதி  அங்கிருந்து புறப்பட்டு ஐக்கிய அரபு நாடு, பஹ்ரைன் பயணம் செய்யும் பிரதமர் மோடி பின்னர் பாரிஸ் நகரில் நடக்கும் ஜி7 மாநாட்டிலும் பங்கேற்கிறார்.

அங்கு அந்நாட்டின் பிரதமர் எட்வார்ட் பிலிப் மற்றும் அதிபர் இமானுவேல் மெக்ரான் ஆகியோரைச் சந்தித்துப் பேசுகிறார். அப்போது இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவுகள், வர்த்தக உறவுகள், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் பேசுகின்றனர்.

தொடர்ந்து,  பிரான்ஸில் கடந்த 1950, 1950களில் இந்தியாவின் ஏர்இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் ஏராளமான இந்தியர்கள் பலியானார்கள். இவர்கள் நினைவாக எழுப்பப்பட்டுள்ள நினைவரங்கில்அஞ்சலி செலுத்தி பிரதமர் மோடி இந்தியர்கள் மத்தியில் உரையாற்ற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பின்னர்,  25 மற்றும் 26-ம் தேதிகளில் பாரீஸ் நகரில் நடக்கும் ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

இந்த பயணத்தின் இடையே 23 மற்றும் 24-ம் தேதிகளில் பிரான்ஸில் இருந்தவாறு ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் நாட்டுக்கும் பிரதமர் மோடி பயணம் செய்கிறார். அபுதாபி இளவரசர் ஷேக் முகமது பின் ஜயத் அல் நஹ்யனை சந்தித்து பிரதமர் மோடி, சர்வதேச விவகாரங்கள், பிராந்தியத்தில் நிலவும் பிரச்சினைகள், ஒத்துழைப்பு குறித்து பேச உள்ளார்

அபுதாபி இளவரசுருடன் இணைந்து, பிரதமர் மோடி மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் விழாவுக்கான தபால்தலையையும் வெளியிடுகிறார்.

இந்த பயணத்தை முடித்துக்கொண்டு 24 மற்றும் 25-ம்தேதியில் பஹ்ரைன் நாட்டுக்கு பிரதமர் மோடி செல்கிறார். முதல்முறையாக பஹ்ரைன் நாட்டுக்கு செல்லும் முதல் இந்தியப் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.