சென்னை,

டிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுடனான சந்திப்பு இன்று 5வது நாளாக கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபத்தில்  நடைபெற்று வருகிறது.

தனது அரசியல் நிலைப்பாடு பற்றி நாளை தெரிவிக்க உள்ளதாக ஏற்கனவே ரஜினி தெரிவித்திருந்துள்ள நிலையில் இன்று 5வது நாள் சந்திப்பு நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு நாள் சந்திப்பின்போதும், ரசிகர்களுக்கு ஒவ்வொரு வகையான தகவல்களை கொடுத்து வரும் ரஜினி இன்று பேசும்போது, ஆரோக்கியத்திற்கு தியானமே காரணம் என்றும்,  ரசிகர்கள் அனைவரும் தியானம் செய்ய வேண்டும். நான் சிங்கப்பூரில் சிகிச்சை பெற்ற போது மீண்டும் உயிர் பெற்று வர ரசிகர்களே காரணம் என்று உருக்கமாக பேசினார்.

ரஜினி இன்று 5வது நாளாக சென்னை மாவட்ட ரசிகர்களை சந்தித்து வருகிறார். அப்போது அவர் பேசியதாவது,

சென்னை எப்போதுமே எனக்கு மெட்ராஸ் தான். மெட்ராஸ் போன்று அனைத்து வகையிலும் சிறப்பாக இருக்க வேண்டும் என கர்நாடகாவில் பேசிக் கொள்வார்கள் என்றார்.

நான் நடிகராவதற்கு அண்ணன் கஷ்டப்பட்டு உழைத்து, உதவினார் என்று பேசிய ரஜினி,  எனக்குள் நடிப்பு திறமை இருப்பதை கண்டுபிடித்தவர் என் நண்பர் ராஜ்பகதூர் தான் என்று தனது நண்பரையும் புகழ்ந்தார்.

நான் . 1973 ல் முதல் முறையாக மெட்ராஸ் வந்தேன். எனக்கு தமிழும் தெரியாது, ஆங்கிலமும் பேச தெரியாது. ஆனால் என் நடிப்பை பார்த்து விட்டு பாலச்சந்தர், உன்னை 3 படங்களில் ஒப்பந்தம் செய்ய உள்ளேன். நீ தமிழ் மட்டும் கற்றுக் கொள், உன்னை எங்கே கொண்டு விடுகிறேன் பார் என்றார்.

பாலச்சந்தருக்கு நான் தத்தெடுக்காத குழந்தை மாதிரி. அதன் பிறகு பஞ்சு அருணாச்சலம் எனக்கு பல நல்ல படங்களை கொடுத்து, என்னை உயர்த்தினார். சுரேஷ் கிருஷ்ணா, மணிரத்னம் என்னை சூப்பர் ஸ்டாராக்கினர். இந்தியாவே என்னை திரும்பிப்பார்க்க வைத்தவர் ஷங்கர்.

அவர் பிரம்மாண்டமாக இயக்கி உள்ள 2.0 படம் ஏப்ரல் 14 ரிலீசாகிறது. அதன் பிறகு 2 மாதங்களில் காலா ரிலீசாகிறது. அதில் எனக்கு வித்தியாசமான வேடம் கொடுத்துள்ளார் ரஞ்சித் என்று தனது திரையுலக வாழ்க்கைக்கு உதவியர்கள் குறித்து பேசினார்.

தொடர்ந்து, ரசிகர்களிடம்,  கனவுகளை அடைய நியாயமான முறையில் முயற்சி செய்ய வேண்டும் என்றும்,  கனவு நிறைவேறாவிட்டால் கவலைப்பட வேண்டாம் என்று கூறிய ரஜினி,  என் உடல் ஆரோக்கியத்திற்கு தியானமே காரணம் என்றார். ஆகவே, ரசிகர்கள் அனைவரும் தியானம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய ரஜினி, தற்போது நான் நலமாக இருக்க ரசிகர்களே காரணம் என்றவர்,  நான் சிங்கப்பூரில் சிகிச்சை பெற்ற போது மீண்டும் உயிர் பெற்று வர ரசிகர்களே காரணம் என்று உருக்கமாக பேசினார்.

” நீங்கள் நடிக்க வரவேண்டாம். அரசியலுக்கும் வரவேண்டாம். ஆனால் உயிரோடு வந்தால் போதும்” என சிங்கப்பூரில் சிகிச்சை பெற்றபோது ரசிகர் ஒருவர் கடிதம் எழுதியிருந்தது தன்னை கண்கலங்க வைத்ததாக ரஜினி கூறினார்.

கனவில் இருக்கும் சந்தோஷம் நனவாகும்போது இருக்காது. அதற்காக கனவு காணக்கூடாது என்றில்லை. கனவு காண வேண்டும். அதனை நியாயமான முறையில் அடைய வேண்டும். அப்போது கிடைக்கவில்லையென்றால் கூட பரவாயில்லை. நீ தனியாக இருக்கும்போது உன்னையே நீ மதிக்கணும். உங்கள் குடும்பம், சுற்றத்தினர் மதிக்கும்படி நடந்து கொள்ள வேண்டும்.  உடம்புக்கு எப்படியோ மெடிசன் தேவையோ அதனைபோல மனதிற்கு மெடிட்டேசன் முக்கியம்”

இவ்வாறு அவர் பேசினார்.