ஸ்ரீநகர்: ஜம்முகாஷ்மீரில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக, 4 ராணுவ வீரர்கள் உள்பட 6 பேர் பலியாகி இருக்கின்றனர்.

ஜம்முகாஷ்மீர், இமாச்சலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கடுமையான பனிப் பொழிவு காணப்படுகிறது. ஸ்ரீநகர், ரஜோரி உள்ளிட்ட பகுதிகளில் பனியால் சூழப்பட்டுள்ளன.

பல இடங்களில் சாலைகளில் பனிப்போர்வையால் போர்த்தப்பட்டுள்ளது போன்று காட்சியளிக்கிறது. சாலைகள், வீடுகள் என எங்கு பார்த்தாலும் பனி படர்ந்து காணப்படுகிறது.

சாலைகளில் கிடக்கும் பனிக்கட்டிகளை இயந்திரங்கள் உதவியுடன் பொது மக்கள் அகற்றும் முயற்சியில் இறங்கி இருக்கின்றனர். குல்காம் அருகே, பனிப்பொழிவு ஏற்பட்டு சாலையில் பனி படர்ந்துள்ளதால், போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கடும் பனிப்பொழிவு காரணமாக, 4 ராணுவ வீரர்கள் உள்பட 6 பேர் சாலை விபத்தில் பலியாகி உள்ளனர்.குப்வாரா பகுதியில் லாங்கேட் என்ற இடத்தில் இந்த விபத்து நிகழ்ந்திருக்கிறது.

சாலை தெரியாததால், ராணுவ வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளாக, 4 வீரர்களும் 2 பொது மக்களும் பலியாகினர். முன்னதாக, கடும் பனிப்பொழிவால் பல்வேறு பகுதிகளுக்கு செல்ல வேண்டிய 11 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டு இருந்தது.