சென்னை:

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தின் கால அவகாசம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதா மரணம் குறித்து ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. ஆணையத்தில் இதுவரை 120 பேர் புகார் மனுக்கள் அளித்துள்ளனர். 28 பேர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளனர்.

அவற்றின் அடிப்படையில் கடந்த மாதம் 22ம் தேதி முதல் ஆணையம் நேரடி விசாரணை நடத்தி வருகிறது. இதுவரை 16 பேர் ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.
சசிகலா, அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப்ரெட்டி, துணைத்தலைவர் பிரீத்தா ரெட்டி உள்பட பலரிடம் விசாரணை நடைபெறவுள்ளது.

விசாரணை ஆணையத்தின் கால அவகாசம் வரும் 25ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே காலநீட்டிப்பு கேட்டு தமிழக அரசுக்கு ஏற்கனவே ஆணையம் கடிதம் எழுதியிருந்தது. நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்துக்கு மேலும் 6 மாதம் கால அவகாசம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.