சென்னை: திமுக கூட்டனியில் மார்க்சிய  கம்யூனிஸ்டு கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக இரு கட்சிகளுக்கு இடையே இன்று ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.

சட்டமன்ற தேர்தலையொட்டி, திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தோழமை கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யும்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே  காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகளும், விசிகவுக்கு 6 தொகுதிகளும், மதிமுகவுக்கு 6 தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்டுக்கு 6 தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன.

மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சி மட்டும் தொகுதிகளை ஒதுக்குவதில் அதிருப்தி தெரிவித்து வந்தது. கூட்டணியில் விரிசல் ஏற்படாமல் திமுக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில், மேற்கொண்டு நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து அந்த கட்சிக்கும் 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும், இதற்கான ஒப்பந்தம் கையெழுத்து இன்று காலை 11 மணி அளவில் நடைபெறும்எ ன தகவல் வெளியாகியுள்ளது.

திமுகவுடன் இன்று தமிழக வாழ்வுரிமை கட்சி மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்துகின்றன.