download
 ‘கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் மீண்டும் 6 சிக்சர் அடிப்பேன்’ என்று இந்திய வீரர் யுவராஜ் சிங்  நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டரான  34 வயது  யுவராஜ்சிங் தற்போது  ஐ.பி.எல். போட்டியில் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். சர்வதேச கிரிக்கெட் அரங்கில் மறக்க முடியாத சாதனை ஒன்றைச் செய்தவர் அவர்.
2007ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஒரு ஓவரில் அத்தனை பந்துகளிலும்… தொடர்ந்து 6 சிக்சர் விளாசியவர் அவர்.
2011-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் அதிரடியாக விளையாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த  யுவராஜ்சிங் அதே ஆண்டில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். பிறகு  சிகிச்சை பெற்று நோயில் இருந்து மீண்ட யுவராஜ்சிங் மறுபடியும் கிரிக்கெட்டில் வெற்றிகரமான வீரராக ஜொலிக்கிறார்.
தவிர புற்றுநோய் விழிப்பு உணர்வு முகாமில் கலந்து கொண்டு, அந்நோயால் பாதிக்கப்பட்டர்களை  ஊக்கப்படுத்துகிறார்.
இந்த நிலையில் மொகாலியில் புற்றுநோய் உள்ளிட்ட ஆட்கொல்லி நோய்களால் பாதிக்கப்பட்ட 17 சிறுவர்-சிறுமிகளை சந்தித்த யுவராஜ்சிங், “புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள்,  மனம் துவண்டு விடக்கூடாது. மனஉறுதியுடன், நம்பிக்கையோடு போராடினால் அதில் இருந்து மீண்டு மறுவாழ்வு பெறலாம்’ என்று நம்பிக்கையூட்டினார்.
அப்போது ஒரு சிறுவன், ‘மீண்டும் ஒரே ஓவரில் 6 சிக்சர் அடிப்பீர்களா?’ என்று கேட்டான். அதற்கு யுவராஜ்சிங், ‘நீ எனக்காக பிரார்த்தனை செய். நான் மீண்டும் 6 சிக்சர்கள் அடிப்பேன்.’ என்று மகிழ்ச்சியுடன் பதில் அளித்தார்.
மேலும் யுவராஜ்சிங் பேசுகையில், ‘அச்சாதனையை செய்து பல ஆண்டுகள் உருண்டோடி விட்டன. எப்படி 6 சிக்சர்கள் அடித்தேன் என்று இப்போது தெரியவில்லை’ என்றார்.