டெல்லி: 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக பாஜக திரட்டிய நிதியில் பாதிக்கும் மேற்பட்டவை தேர்தல் பத்திரங்கள் மூலமாக வந்ததாக தேர்தல் ஆணைய தணிக்கையில் தெரிய வந்துள்ளது.

அரசியல் கட்சிகள் நன்கொடைகள், வருமானம் குறித்த தகவல்களை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்தாக வேண்டும். அந்த வகையில் பாஜக, காங்கிரஸ் உள்பட பல்வேறு தேசிய கட்சிகள் பதில் மனுதாக்கல் செய்துள்ளன.

பாஜகவின் வருமானத்தை பார்த்தால் தலை சுற்றுகிறது. 2017 -2018ம் நிதியாண்டில் ரூ. 1027 கோடியாக இருந்த வருமானம் ஒரே ஆண்டில் 100 சதவீதம் அதிகரித்து 2410 கோடி ரூபாய் ஆக உயர்ந்துள்ளது.

2017-18ம் நிதியாண்டில் தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் 210 கோடி தான் கிடைத்த நிலையில் இப்போது 1450 கோடி ரூபாய் வந்துள்ளதாக பாஜக தெரிவித்துள்ளது. கடந்த நிதியாண்டில் 1005 கோடி ரூபாய் செலவு செய்ததாக தேர்தல் ஆணையத்தில் பாஜக கூறி உள்ளது. அதாவது 60 சதவீதம் தேர்தல் பத்திரங்கள் மூலமாக வந்துள்ளது.

எதிர்க்கட்சி, செயற்பாட்டாளர்கள்  என பலரும் தேர்தல் ஆணையம் விமர்சனங்கள் வைத்திருக்கின்றன. ஆனாலும்ம், தேர்தல் பத்திரங்களை விற்பனை செய்வதில் அரசாங்கம் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறது.

அதன்படி, தேர்தல் பத்திரங்களின் பதின்மூன்றாவது தவணை விற்பனை இந்த வாரம் அறிவிக்கப்பட்டது, இது ஜனவரி 13 முதல் ஜனவரி 22 வரை எஸ்பிஐயின் 29 கிளைகள் மூலம் நடைபெறும்.