டெல்லி: கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் விகிதம் 62.93 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறி இருப்பதாவது: நாடு முழுவதும் 24 மணி நேரத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 19,235 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா சோதனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும், குணமடைந்தவர்களுக்குமான வித்தியாசம் 2,42,362-ஆக உள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,20,916லிருந்து 8,49,553 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 5,15,386-லிருந்து 5,34,620 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகளவாக 28,634 கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 24 மணி நேரத்தில் 551 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 19,235 பேர் குணமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.