சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 66 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவுக்கு 23 பேர் பலியாகி இருக்கின்றனர்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இதை தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: தமிழகத்தில் மேலும் 66 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை  1,821 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமாகி மேலும் 94 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதன் மூலம், கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 960 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 52 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பில் 835 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் மட்டும் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம், சென்னையில் மட்டும் 495 பேருக்கு கொரோனா பாதிப்பு இது வரை உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் 23 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.