சென்னை;

மிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்காக 67ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் என்று தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு தெரிவித்தள்ளார்.

நாடு முழுவதும் மக்களவை இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 18 ஆம் தேதி தமிழகம், புதுச்சேரி உட்பட 13 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசம் என மொத்தம் 97 தொகுதிகளுக்கு தேர்தல் நடை பெற உள்ளது. இந்த தொகுதிக்களுக்கான வேட்புமனுத் தாக்கல் மார்ச் 19 அன்று தொடங்கி 26 ஆம் தேதியுடன் முடிவடைந்தது.

இதையடுத்து, சென்னை தலைமை செயலகத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யா பிரதா சாஹூ, “தமிழகத்தில் 67,000 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு மையத்தில் 1,400 வாக்காளர்கள் வாக்களிக்க முடியும் என்று கூறினார்.

இந்த முறை யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் வகையில் விவிபேட் கருவி பொருத்தப்படும் என்றவர்,  வி.வி.பேட் கருவியை பயன்படுத்துவதால் வாக்குப்பதிவில் காலதாமதம் ஏற்படாது, அனைத்து சோதனைகளும் மேற்கொள்ளப்பட்ட பிறகே வி.வி.பேட் கருவி பயன்படுத்தப்பட உள்ளதாகவும்  கூறினார்.

மேலும், 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது குறித்து தலைமை தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்யும் என்றும் வாக்களிப்பதற்காக மாலை 6 மணிக்கு மேல் வரிசையில் நிற்பவர்களுக்கு டோக்கன் வழங்கப்படும் என்றும் கூறினார்.