சாத்தான்குளம் வந்துள்ள சி.பி.ஐ. குழுவினர் 8 பேரில் 7 பேருக்கு கொரோனா.

சாத்தான்குளம் காவல்நிலையத்தில் ஜெயராஜும், அவரது மகன் பென்னிக்சும் உயிர் இழந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது.

சி.பி.ஐ. தனது விசாரணையை ஆரம்பிக்கும் முன்பாக இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கொஞ்ச நாட்கள் விசாரித்து வந்தனர்.

அவர்கள், தாங்கள் நடத்திய விசாரணை அறிக்கையைச் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நேற்று முத்திரையிடப்பட்ட கவரில் வைத்து தாக்கல் செய்தனர்.

அப்போது, இந்த வழக்கை விசாரிக்கும்,  8 சி.பி.ஐ. அதிகாரிகளில் 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதனால் அவர்கள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசின் உதவி  சொலிசிட்டர் ஜெனரல் கதிர்வேலு நீதிமன்றத்தில் கூறினார்.

இதனிடையே இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள போலீஸ் ஏட்டு முருகன், காவலர் முத்துராஜ் ஆகியோரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது நேற்று ஊர்ஜிதம் செய்யப்பட்டதால், இருவரும் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக உடனடியாக அனுமதிக்கப்பட்டனர்.

-பா.பாரதி.