டில்லி,

டில்லி  ரியான் சர்வதேச பள்ளியில் 7 வயது மாணவர் கொலை விவகாரம் குறித்து விசாரணை செய்ய அரியான மாநில போலீஸ் மும்பை வந்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பாக நாட்டையே உலுக்கிய  டில்லி குருகிராமில் உள்ள ரியான் சர்வதேச பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்த 7 வயது மாணவன், பள்ளி கழிவறையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தான். அதன் அருகே கத்தியும் கிடந்தது.

மாணவனின் மர்ம சாவு குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக போலீஸ் மூவரை கைது செய்து விசாரித்து வருகிறது என தகவல் வெளியாகி உள்ளது.

பள்ளியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி டில்லி போலீஸ் விசாரணையை நடத்தி வருகிறது.

இந்நிலையில் அரியானா மாநில போலீஸ் குழு மும்பை வந்துள்ளது. அவர்கள் ரியான் சர்வதேச குழுமத்தின் தலைமை அலுவலகத்திற்கு வந்து, அதன் உரிமையாளரிடம்  விசாரணை நடத்த இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து அந்த பள்ளியின் நிர்வாகி முன்ஜாமின் மனு தாக்கல் செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.