சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக, தேர்தல் பணியில் 702 பறக்கும் படைகள், 702 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு இருப்பதாகவும், பாதுகாப்பு பணிகளுக்கு  330 கம்பெனி துணை ராணுவம் பயன்படுத்தப்படும் என  தமிழக தலைமை தேர்தல்அதிகாரி சத்தியபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த தேர்தல் ஆணையர், தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 702  நிலையான  கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும்,  ஒவ்வொரு தொகுதிக்கும் 3 பறக்கும் படைகள் வீதம் 234 தொகுதிகளுக்கும் 702 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும்  ஒவ்வொரு தொகுதிக்கும் ஒர வீடியோ குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது.

பாதுகாப்பு பணிக்காக 330 கம்பெனி துணை ராணுவம் அனுப்பி வைக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. தற்போது வரை 45 கம்பெனி துணை ராணுவப்படை வந்துள்ள நிலையில், அடுத்த 2 நாட்களில் மேலும் 15 கம்பெனி வர உள்ளது.

தேர்தல் நடத்தை விதிகளை மீறி போஸ்டர், பேனர் வைத்ததாக 46 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.