டெல்லி,

54 போர் கைதிகள் உட்பட, காணாமல் போன 74 ராணுவ வீரர்கள் பாகிஸ்தான் சிறைகளில் இருக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதில் அளித்த வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இதை தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் உள்ள இந்தியாவை சேர்ந்த போர் கைதிகளை மீட்க, இந்திய அரசாங்கம் ராஜதந்திர முறையில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆனால் பாகிஸ்தான் அரசு தனது பிடியில் இந்திய போர் கைதிகள் இருப்பதை இதுவரை ஏற்றுக் கொள்ளவில்லை என  அவர் கூறினார். பாகிஸ்தானின் பிடியில் 301 இந்திய மீனவர்களும் 897 படகுகளும் இருப்பதாக தெரிவித்த சுஸ்மா ஸ்வராஜ், கடந்த ஜனவரி 1  வரை, 55 பாகிஸ்தான் மீனவர்களும், 287 பாகிஸ்தான் சிவில் கைதிகளும் இந்தியாவால் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.