இசைஅமைப்பாளர் இசைஞானி இளையராஜாவுக்கு இன்று 77வது பிறந்தநாள் தினம். இதையொட்டி திரையுலகினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
விஜய்சேதுபதி மற்றும் சரண்யா நடித்த ‘தென்மேற்கு பருவ காற்று’ பட இயக்கு னர் சீனு ராமசாமி இசைஞானிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். தனது வாழ்த்தை அவர் கவிதையாக தெரிவித்துள்ளார்.
இதோ அந்த கவிதை..


எழுபதுகளில் தொடங்கிய எங்கள் பண்ணைபுரத்துப்
பாணனே
மேற்குத்தொடர்ச்சி
மலையிலே
மிதந்து வந்த மேகமே

உமது வருகையை
எதிர்பார்த்து
இசையின் வாசல்
காத்திருந்தது
கருப்பு வெள்ளை
அன்னக்கிளியாள்
பாட்டிசைக்க
எங்கள் இதயத்தில்
வண்ணக்கிளிகள் பறந்தன
அன்று பெய்யத் தொடங்கிய மழை
இசையின் சிரபுஞ்சியானது
தவிலின் நாவுகளைப்
பேச வைத்தாய்
தமிழிசைக்கே அது
முதுகெலும்பானது

உமது மூச்சு
புல்லாங்குழலுக்கு சுவாசம்

உமது வயலின்கள்
சலனப்படமென
எங்கள் சாலைகளை
உயிர்ப்புறச் செய்தது

உமது சங்கீதம் எங்கள்
நினைவுத் தடத்தில்
பூத்த பூ
காலத்தின் பிம்பம்
கடிகாரத்தின்
பென்டுல சப்தம்
தூக்கத்திற்கு முன்
எம்மைத் தீண்டும்
அமைதித் தென்றல்

நீர் ஆர்மோனியத்தில்
விரல் வைத்தீர்
எங்கள் செங்காட்டு பூமியில்
பெயர் தெரியாச்
செடி ஒன்று
பூ பூத்தது

இசைஞானியே
வெண்பா இயற்றிய
தமிழ் ஞானியே
நீர் சுற்றியதால்
கிரிவலம்
இசைத்தட்டானது

எனதன்பு பிறந்தநாள்
வாழ்த்துக்கள்…..

இவ்வாறு இயக்குனர் சீனுராமசாமி குறிப்பிட்டிருக்கிறார்.