ஜலாலாபாத்,, ஆப்கானிஸ்தான்
கடந்த வெள்ளிக்கிழமை ஆப்கானிஸ்தான் ஜலாலாபாத் நகரில் நடந்த உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்து 8 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு சமீபத்தில் டெஸ்ட் அந்தஸ்து வழங்கப்பட்டது. ஆப்கன் கிரிக்கெட் அணி தங்களின் முதல் டெஸ்ட் போட்டியை வரும் ஜூன் மாதம் இந்தியாவுடன் விளையாட உள்ளனர். தற்போது ஜலாலாபாத் நகரில் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இங்குள்ள கால்பந்து மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியைக் காண கடந்த வெள்ளிக்கிழமை ஏராளமன மக்கள் கூடி இருந்தனர்.
இந்த நிலையில் அந்த மைதானத்தில் தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த குண்டு வெடிப்பினால் சுமார் 8 பேர் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்துள்ளனர். மேலும் 45க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு எந்த ஒரு தீவிரவாத இயக்கமும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.