சென்னை:

மாநில தலைநகர் சென்னையில் மற்றும் அதன் அண்டை மாவட்டங்களில் தீவிரமாக பரவி வரும் கொரோனா தொற்றை தடுக்க 81 நடமாடும் மருத்துவக் குழுக்களை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று தொடங்கி வைத்தார்.

இந்த நடமாடும் மருத்துவ குழுக்கள் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பாதிப்பு உள்ள பகுதிகளுக்கு நேரடியாக சென்று பரிசோதனைகளை மேற்கொள்ளும்.

இதுகுறித்து தமிழகசுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அம்மாவின் அரசு, முதலமைச்சரின் தலைமையில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த கட்டமைப்புகள், உபகரணங்கள், மனிதவளம், மருந்து மாத்திரைகள், தற்காப்பு உடைகள் ஆகியவற்றை தேவைக்கு ஏற்ப தட்டுப்பாடு இல்லாமல் போதிய அளவில் கொள்முதல் செய்து கொரோனா தடுப்பு மற்றும் மேலாண்மைப் பணிகளை மிகச்சிறப்பாக தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. இந்த தீவிர நடவடிக்கைகள் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கொரோனா நோய் தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது.

இருப்பினும் பல்வேறு காரணங்களால் சென்னை மாநகராட்சியில் சில மண்டலங்களிலும், செங்கல்பட்டு, திருவள்ளுர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்று நோயின் தாக்கம் இருந்து வருகிறது.

பொது சுகாதாரத்துறையின் இணை இயக்குனர்கள், துணை இயக்குனர்கள், சுகாதார அலுவலர்கள், மருத்துவ அலுவலர்கள், இந்திய மருத்துவ அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட 726 அலுவலர்கள் ஏற்கனவே கொரோனா தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகளில் சென்னை மாநகராட்சி பகுதிகளில் ஈடுபடுத்தப்பட்டு கொரோனா கட்டுப்பாடு மற்றும் மேலாண்மை பணிகளை சிறப்பாக மேற்கொண்டு வருகின்றன.

இதனைத் தவிர 80 எண்ணிக்கையிலான 108 ஆம்புலன்ஸ், பொது சுகாதாரத் துறையின் 33 நடமாடும் மருத்துவ வாகனங்கள், 30 ஆர்.பி.எஸ்.கே. வாகனங்கள், 20 ஜெ.எஸ்.எஸ்.கே. வாகனங்கள் உட்பட 173 வாகனங்கள் ஏற்கனவே சென்னை மாநகராட்சி பகுதிகளில் கொரோனா தொற்று தடுப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

சென்னைக்கு  61 மருத்துவ குழு

முதலமைச்சரின் உத்தரவிற்கிணங்க கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மேலும் வலுவூட்டும் வகையில் சென்னை மாநகராட்சியில் 61 நடமாடும் விரைவு மருத்துவ குழுக்களும் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 10 குழுக்களும், திருவள்ளூர் மாவட்டத்தில் 5 குழுக்களும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 5 குழுக்களும் என மொத்தம் 81 நடமாடும் விரைவு மருத்துவ குழுக்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்டு கூடுதலாக ஈடுபடுத்தப்படவுள்ளது.

இந்த நடமாடும் விரைவு மருத்துவ குழுக்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று காய்ச்சல் முகாம்கள் நடத்தி கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களை உரிய பரிசோதனைகள் மூலம் கண்டறியும் பணிகளையும் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களின் வீடுகளுக்கே சென்று நோய் கண்காணிப்பு பணிகளிலும் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

இதன் மூலம் சென்னை மாநகராட்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்று கண்டறியும் பணிகள் மற்றும் தனிமைப்படுத்தபட்ட நபர்களை கண்காணிப்பு பணிகளும் தீவிரமாக்கப்பட்டு கொரோனா தொற்றுநோய் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்படும்.

இந்நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ், பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம், மருத்துவப் பணிகள் இயக்குநர் குருநாதன், மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.