ஐதராபாத்:
தெலங்கானா மாநிலத்தில்  ஒரே கிணற்றில் 9 புலம்பெயர் தொழிலாளர்கள்  உடல்கள்  மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தற்கொலையா அல்லது கொலை என்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொரோனா ஊரடங்கால் மிகவும் பாதிக்கப்பட்டது புலம்பெயர் தொழிலாளர்கள்தாம்.  அவர்களை மத்திய மாநில அரசுகள் கண்டுகொள்ளாத நிலையில், சொந்த ஊர்களுக்கு நடந்துசெல்லும் அவல நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

இந்த சூழலில்  தெலங்கானா மாநிலம், வாரங்கல் பகுதியில், புறநகரில் உள்ள ஒரு கிணற்றில் சிலரது உடல்கள் மிதப்பதாக அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் காவல்துறையில் புகார் அளித்தனர்.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் , தீயணைப்பு வீரர்கள் உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஒவ்வொரு உடலாக வெளியே எடுக்க எடுக்க மொத்தம் 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன.
இந்த 9 பேரில்  6 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் மேற்கு வங்கம் மற்றும் பிகாரைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. அவர்கள் கடந்த 20 ஆண்டுகளாக வாரங்கலில் உள்ள சிவநகர் பகுதியில் வசித்து வருகின்றனர்.

கரோனா வைரஸ் ஊரடங்கால் அவர்கள் கடந்த சில நாள்களாக ஒரு அறையில் வசித்து வந்துள்ளனர். உடல்களை குடும்பம் வாரியாக அடையாளம் கண்டுபிடித்த காவல் துறையினர் நகராட்சி ஊழியர்களின் உதவியுடன் உடல்களை உடற்கூறாய்வுக்காக மருத்துவமணைக்கு அனுப்பப்பட்டது.

மீட்கப்பட்ட உடல்களில் எந்த காயமும் இல்லை என்றும் அவர்கள் தற்கொலை செய்திருக்கலாம் என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், கீசுகொண்டா போலீஸார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.